Saturday, December 16, 2006

டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!

நம்முடைய பண்டைய கலாச்சாரங்கள்,மக்களின் சிந்தனைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை பிற்சந்ததியினருக்கு ஆவணமாக திகழ்வதில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்பது திண்ணம். அவ்வகையில் கலை என்பது பொழுது போக்கு'க்காக மட்டுமில்லாமல் மக்களிடம் தகவலை கொண்டுச்செல்லும் ஊடகமாகவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியே பரிமாற்றும் ஏணியெனவும் திகழ்கின்றது. நம்மோடு பின்னிபிணைந்து விட்ட பாரம்பரியத்தின்,இம்மண்ணின் மாசற்ற மங்காபுகழ் கலாசாரத்தின் அடிஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவைகளில் கிராமியத்து கலைகளுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வகையில் கரகாட்டம் நம்முடைய தமிழ் பரம்பரியக் கலை படிமங்களில் அழியா,அழியும் அழிக்கின்ற கலை வகைளில் ஒன்று.

"அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து கொண்டு அதே கிழே விழாமல் நிகழ்த்தப்படும் ஒரு வகையான தமிழக கிராமிய ஆட்டம்" என நம் பின்வரும் சந்ததியினருக்கு நாம் குறிப்பு'ன்னு எழுதி வைப்போம். நம்மால் முடிந்த ஒரு கலைச்சேவை?? ஆனால் அக்கலையில் ஈடுப்பட்டுள்ள கலைஞர்களில் அன்றாட வாழ்க்கையோ அவர்களே போல் வெளிச்சத்திடம் அண்டி மின்னி சாவும் விட்டில் பூச்சிகளென ஒரு சிறுநிகழ்வாகதான் இருக்கிறது.



என்னுடைய படிக்கிற காலத்தில் எம் நண்பர் மேற்கொண்ட கிராமத்து கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக மற்றுமொரு நண்பனின் கிராமத்து வீட்டுக்கு சென்றிருந்தோம். அச்சமயம் அவனுடைய அண்டைவீட்டில் வசித்த கரகாட்டம் ஆடும் பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சந்திப்பு எனிலும் எவ்விதத்திலும் மறக்கவியலா தருணங்கள் அவை. ஒரு சாதாரணமாக வீதியிலோ, பேருந்து பயணங்களிலோ தென்படும் பெண்மணியாகவே அவருடைய தோற்றம். ஆனால் அவர் ஒரு கரகாட்ட கலைஞர்யென கேள்விப்பட்டதில் சிறிது வியப்புதான் தோணிற்று. அவரிடம் எவ்வகையான முகப்பூச்சோ,வெட்டி வெட்டி பேசும் ஒரு விதமான பேச்சோ எதுவுமில்லை. ஆனால் அதைவிட அவர் முகத்தில் ஒரு நிம்மதியாய் வாழும் ஜிவன் என்ற அறிகுறியான தேஜஸே இல்லை!!.



அப்பெண்மணியை பார்த்தமாத்திரத்தில் நான் எழுப்பிய கேள்வி இதுதான், எப்பிடிங்க குடம் கிழே விழாமால் பேலன்ஸ் பண்ணி நடனமாடிறீங்க. அதுக்கு அவர் சிரித்தப்படியே "விடாமுயற்சியும்,கலையில் அர்ப்பணிப்பும், இருந்தால் எதுவும் இலகுதான்". அடுத்தகேள்வியாக உங்களின் நடனநிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் எந்தளவுக்கு உங்களின் வாழ்வாதரத்துக்கு சரியாக வருகின்றது. அதுக்கு அவரு அளித்த பதில் இன்றும் ஒரு வரி கூட மாறாமல் நினைவில் இருக்கு. "சிலவேளைகளில் வருடத்துக்கு ரெண்டு,முணு மாதங்களில் ஆட்டம் ஆட வாய்ப்பு கிடைக்கும்,மிச்சவேளைகளில் ஆங்கங்கே கிடைக்கும் கொலுத்து (விவசாய கூலி)வேலை பார்த்துதான் வயித்துக்கு கஞ்சி குடிப்பேன்".

ஆபாசங்களும்,அனர்த்தமான வரிகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கும் பாட்டுவரிகளுக்குதானே நீங்களெல்லாம் ஆட்டம் போடுறீங்க? இம்மாதிரியான சூடான கேள்வி கேட்டது என்னுடைய நண்பனின் அண்ணன். அதுக்கு அந்த பெண்மணியோ சிறிதும் தயக்கம் இல்லாமல் சொன்னது, ஐயா நான் அப்பிடியிருக்க போய்தாய்யா நாலுபேரும் கூடுறாங்க, ஆனா என்னோட ஒடம்புக்குன்னு ஒன்னு வந்து மொடங்கிட்டா யாருய்யா வந்து என்னை பார்ப்பாங்கன்னு சொல்லு?, நீங்க சொல்லுறதிலே ஆபாசஅசைவுகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கிற வரிகளும் எல்லார்தாப்பா ரசிக்கிறாங்க. காடுகரையிலே நெத்தி வியர்வை நிலத்திலே சிந்தி வேலை பார்த்து திரும்புற என்னோட சாதிசனங்க ரசிக்கதான் என்னோட கலை. அது அவங்களே பொறுத்தவரை அவங்களுன்னு இருக்கிற பொழுதுபோக்கு அம்சம். ஒங்களைமாதிரி கொழாப்போட்ட ஆளுகதான் தப்பா பார்த்துபிட்டுதான் ஏட்டிலே கண்டமேனிக்கு எழுதுறீங்க, ஆணுக்கும்,பெண்ணுக்கும் இருக்கிற காதலே வள்ளுவர் எல்லா நிலைகளிலும் எடுத்து எழுதி ஒலையாக்கிட்டு போனாரு. நாங்க எங்க வயித்து பொழப்புக்கு அதிலே சிலதை தொட்டு கலையாக்குறோம். ஒங்க சினிமாவிலே அடிக்கிற கூத்தே விட நாங்க செய்யுறது ஒன்னும் மோசமில்லையெப்பா சாமிகளா..

அவருடைய இத்தகைய பதிலுக்கு எங்களால் கொடுக்கமுடிந்த ஒரே ஒரு பதில் மெளனம் மட்டுமே. அவங்க நிலைல இருந்தது இது ஒரு மிகச்சரியான விளக்கம் தான். நம் போன்ற பார்வையாளர்களுக்கு அக்கலைஞர்களின் நிலை என்னவென்று தெரியும்?? நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொரு வகையாக தாக்கத்தே ஏற்படுத்தி செல்கின்றன்ர். அவ்வகையில் எனக்கு இப்பெண்மணியும் ஒருவர். சென்றமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது பேருந்து நிறுத்ததில் இவரை பற்றி பலவகையான வர்ணிப்பு அடைமொழிகளோடு கரகாட்டம் நடைபெறும் என சுவரெட்டியே கவனித்தேன், ஆக அவருடைய வாழ்க்கை ஆட்டத்தில், நம் வாழ்கையோ ஓட்டத்தில்???.