Monday, December 22, 2008

நன்னீர் வயல்

"ஏண்டி, காலேஜ்க்கு போலியா? இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே?"

"ஹிம், போவனும்! இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்டுதான் கிளம்பனும்"

"என்னத்தயாவது பொய் சொல்லிக்கிட்டு கெடக்காதுடீ, அந்த பய ஊருக்கு போனதுதானே ஒன்னோட சோர்வுக்கு காரணமின்னு தெரியும்"

"ஏய் ஆத்தா, என்னாத்தே, அங்கன மூலையிலே போயி பொலம்பிட்டு இருக்கே?"ன்னு சத்தம் போட்டுக்கிட்டே வீட்டிற்க்குள் சென்றாள் அங்கயற்கண்ணி, அவளை இந்த ஊருக்குள் எல்லாருக்கும் தெரிந்த பேரு, படிப்பாளி புள்ள, தமிழில் மூன்றாவது பட்டபடிப்பை படிப்பவள்.

"ஏண்டி அங்கு, காலேசேக்கு போவாமே இங்கன எதுக்கு நின்னுக்கிட்டு கெடக்கே?"

"ஏய் கெழவி, போவமாட்டே, நான் என்னத்துக்கோ நின்னு தொலைக்கேன், இப்போ நான் என்னத்துக்கு நிக்கிறேன்னு தெரிஞ்சு என்னத்த பண்ணி தொலைக்க போறே?"

"ஆத்தி மாரியாத்தா, உங்காத்தா'தான் சாமியாடி'ன்னா நீ எதுக்குடி அருளு இறங்கமே இப்போ சாமியாடுறே, மொட்டவெயிலிலே அதுவும் அறுப்பு போட்ட காட்டிலே நிக்கிறேன்னு கேட்டா கத்துறே"ன்னு சத்தம் போட்டுகிட்டே தண்டட்டி கெழவி வெலகி போனாள்.

"வாடா, வா. வா... ஊமைக்கொட்டான், ஒன்ன பார்க்கமேதான் ரெண்டு நாளா தவிச்சு கெடக்கேன்"

"ஒன்ன ரெண்டு நாளா பார்க்கமே இருந்தாதுனாலே தான் நான் சந்தோசமா இருக்கேன்"

"ஏன் பேசமாட்டே நீயி? ஒன்னப்பார்க்கமே ரெண்டு நாளா பைத்தியம் மாதிரி திரிஞ்சுட்டு இருக்கென், சும்மா இருந்தாக்கூட என்னத்துக்கு முஞ்சியே உம்முன்னு வைச்சிருக்கேன்னு ஆத்தா திட்டுது, இந்த காட்டு'லே வந்து நின்னா போறவாறதுக'ல்லாம் கேள்வி கேக்குதுக, நீ என்னாடா'ன்னா என்னை பார்க்கமே இருக்குறதுனாலேதான் சந்தோசமா இருக்கேன்னு சொல்லுறேன்னு அழ ஆரம்பித்தாள்.

"ஏலேய் லூசு பிடிச்சவளே, சும்மாகாச்சுக்கும் சொன்னாக்கூட ஒனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருமே, வேலை வெட்டியெல்லாம் பார்க்கவேணாமா? ஒன்னோட கண்ணு பார்வைக்கிட்டே இருக்கமுடியுமா?"

"யாரு ஒன்ன வேலயெல்லாம் பார்க்கவேணாமின்னு சொன்னா? காணாமே என்னோமோ இருந்துச்சுன்னு சொன்னேன்.. "

"ஆமா ரெண்டுநாளா என்னபார்க்கமே இருந்து பார்க்கிறேலே, அப்பிடியே ஓடிவந்து கட்டிபிடிச்சு இங்கிலிசுபடத்திலே வர்றமாதிரி ஒரு முத்தம் கொடுக்கவேண்டியதுதானே?"

"ஊமைக்கொட்டான், இந்த ஊரு ஒன்னயே எம்புட்டு நல்லவனு'ன்னு நம்புது தெரியுமா? நல்ல படிச்ச பய, அழகுசுந்தரம்'கிற பேருக்கேத்த மாதிரி கண்ணுக்கு லட்சணமா இருக்கான், சொந்த தொழிலு பண்ணுறான், அப்பன்க்கூட சேர்ந்து வெவசாயம் பண்ணுறான்னு ஒன்ன எல்லாரும் ஏத்தி வைச்சி பேசி கெடக்குதுக.. ஆனா நீ எப்பிடிபட்டவனு எனக்குல்ல தெரியும், எஞ்செட்டு பொண்ணுக எல்லாத்துக்கும் ஒம்மேலே ஒரு கண்ணு, அதுகளுக்கு முன்னாடியே நான் முந்திக்கிட்டேன்னு அவளுகளுக்கு கொஞ்சம் எரியதான் செய்யுது?"

"ஒன்னோட செட்டு'லே யாரு யாருடி? பேரை சொல்லு, கவுத்திறலாம்"

"கவுத்துற மொகறகட்டைய பாரு? செவனனே'னு இரு, இல்ல முரட்டு வைத்தியம் பார்த்துப்பிடுவேன்,

"கிழிச்சே, என்னோட மாமன்மக நீ, ஒனக்கு நானு, எனக்கு நீ'தான்னு எப்போவோ பேசி வைச்சிட்டாங்க, இவ்வளவு நாளிலே ஒருதடக்கயாவது கட்டி பிடிச்சிருக்கியா, கன்னத்திலே ஒரு முத்தமாவது கொடுத்திருக்கீயா?"

"அப்பிடியே இரு, பக்கத்திலே முள்சுள்ளி இருக்கு, ஓங்கி கன்னத்திலே போடுறேன், அத நான் கொடுத்த முத்தமா வைச்சிக்கோ"

"ஹீக்கும், நீ கொடுக்கிற முத்தம், முள்ளு சுள்ளி குத்துறமாதிரி இருக்குமின்னு சொல்லவர்றியா?"

"நெசமா நீ அடி வாங்கிட்டுதாண்டா போவே... கல்யாணத்துப்புறம் ஆண்டாள் சொன்னமாதிரி கற்பூரம் வாசனையா? இல்ல கமலபூ வாசனையா'ன்னு ஆராய்ச்சி பண்ணலாமின்னு இருக்கேன், அதுவரைக்கும் பொறுமையா இரு"

"என்னடி கற்பூர வாசனை, அது இதுன்னு சொல்லி என்னை கழுத'ய ஆக்கீட்டியா? "

"லூசு மாமா! அதுக்கு வேற அர்த்தம், ஒனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது? ஆண்டாள் பாசுரங்கள் மாதிரி இன்னும் எந்தவொரு பெண் கவிஞரும் தங்களோட காதலை பத்தி சொல்ல முடியாது... உதாரணத்துக்கு ஒன்னு சொல்லுறேன் கேளு.."

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கொடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே.

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? தன்னை கண்டுக்காது இருக்கிற காதலன் மேலே கோவப்பட்டு, அந்த வேகத்திலே.. "

"ஹிம், அதுக்கு மேலே சொல்லு, ஏன் வெட்கமெல்லாம் படுறே?"

"காத்துக்கூட உள்ளுக்க போவாத அளவுக்கு அப்பிடியே இறுக்கி கட்டிபிடிக்கிறது'னு அர்த்தம். இன்னும் இருக்கு, அதெல்லாம் ஒன்க்கிட்டே சொல்லமுடியாது போடா"

"ஹிம், பாசுரத்துக்கெல்லாம் அர்த்தம் சொல்லிதாறே, அது எப்பிடின்னு செஞ்சுதான் காட்டுனாதான் என்னா?"

"மொகரகட்டை, அதுக்குள்ள என்ன அவசரம், அதெல்லாம் நேரம் வர்றப்போ செஞ்சல்லாம் காட்டுவோம்."

"அந்த நேரம் வாறாமே போச்சுன்னா என்ன பண்ணுவே?"

"ஒனக்கெல்லாம் என்னை பார்த்தா எளக்காரமா இருக்குலே? ஊமைக்கொட்டான் ஒன்ன வெரட்டி வெரட்டி விரும்புறதுதான் ஒனக்கு தொக்கா போச்சில்லை, இந்த ஊரு பொம்புள்ள புள்ளய்ங்கன்னா ஒங்களமாதிரி ஆளுகளுகெல்லாம் எளக்காரமாதாண்டா இருக்கு?"

"அடியேய் இத்து போனவளே, அப்பிடியா நான் சொன்னேன்"

"பின்ன எப்பிடிப்பட்ட அர்த்தத்திலே சொன்னே?

ஒங்கப்பன் என்னோட அப்பனை வெட்டிட்டு செயிலுக்கு போனாதான் தன்னோட கட்டை வெந்து சாம்பலாகுமின்னு சொல்லிட்டு திரியுது.. இதிலே எங்கிட்டு நாமே சேர்ற‌து.. ஓடிபோயி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிட்டு லெட்ட‌ரு போட்டுருவோமா?

"என்னான்னு லெட்ட‌ரு போடுவே? நாங்க‌ ஓடிப்போயிட்டோமின்னா? அதுக்கு நீயி எங்க‌ப்ப‌ன் க‌ழுத்திலே ஓங்கி ஒன்னை போட்டுரு, நான் ஒங்க‌ப்ப‌ன் கழுத்திலே போட்டு பின்னாடியே வ‌ந்துறேன், ரெண்டும் வ‌ய‌சான‌ காலத்திலே செவ‌னே'ன்னு இருக்காமே முறுக்கிட்டு திரியுதுக‌"

"அடிய்யே கொலைக்கார‌ பாவி, எதுக்குடி இந்த‌ ர‌த்தவெறி"

"பின்ன‌, இதுக‌ ரெண்டு பேரு ப‌ண்ணுற‌ அக்க‌ப்போரு'லே ந‌ம்ம‌ கொல‌ச்சாமி கோயிலே பானைதூக்கி பூசை ப‌ண்ணுற‌து ப‌த்து ப‌தின‌ஞ்சு வ‌ருஷ‌மா ந‌ட‌க்காமே இருக்கு, இந்த‌ வ‌ருச‌த்து வைகாசி பொங்க‌லுக்காவ‌து சேர்ந்து சாமி கும்பிடுவோமின்னு எங்காத்தா'க்கு சாமி வ‌ந்து சொன்னுச்சு, எப்பிடி ந‌ட‌க்க‌ப்போகுன்னுதான் தெரியல"

"அட‌ சாமி வ‌ந்து சொல்லிருச்சா, அப்போ ந‌ட‌ந்துரும் விடு"

"போன‌ வார‌ம் கூட‌ ஒங்க‌ப்ப‌ன் எங்க‌ தெரு ப‌க்க‌ம் போச்சு, அதுக்கு எங்க‌வீட்டு பெருசு பொறுமின‌த‌ பார்க்க‌னுமே? என்ன‌ ச‌ண்டை எள‌வ‌ம‌சுரோ, இப்பிடி கீரியும் பாம்பா திரியுதுக‌, நீ வைக்க‌ப‌ட‌க்கிட்டே சாய்ச்சினே கெட‌க்க‌தே, ர‌வை'க்கு அடிச்ச‌ குளிரு'ல உள்ள‌ ஈர‌ம் கெட‌க்கும் ஆவு கீவு இருக்க‌ போவுது"

"அதெல்லாம் உள்ளே அமைதியாதான் கெட‌க்கு, நேர‌ம் கெட‌ச்சாதான் ப‌ட‌மெடுக்கும்"

"மொக‌ர‌க்க‌ட்ட‌ய‌ பாரு, ட‌புள்மீனிங்'லே வ‌ச‌ன‌ம் பேசுறீயாக்கும், பெருசு ச‌ண்டை தீர‌ ஏதாச்சும் சொல்லு"

"என்ன‌தான் ப‌ண்ணுற‌துதான் தெரிய‌ல‌, நம‌க்கு க‌லியாண‌ம் ந‌ட‌ந்த‌தான் இதுக‌ ஒன்னுகூடுமின்னு நினைச்சேன், அது எப்போ நடக்குமின்னே தெரியல, உங்க‌ண்ணே கடைக்கு போயிருந்தேன், அதுக்கூட‌ சொல்லி பொல‌ம்பிட்டு கெட‌ந்துச்சு."

"ஏலேய், சாராய‌க்க‌டை'க்கு எதுக்கு போனே?"

"அடிய்யே, அது டாஸ்மாக்குடி, சாராய‌க்க‌டை இல்லை"

"என்ன‌ எழ‌வோ,அது ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு வேற‌ என்ன‌த்த‌யாவ‌து வேல‌ய‌ பார்க்க‌மே அங்க‌ன‌ போயி சூப்ப‌ருவைச‌ரு வெல‌ பார்க்கிது"

"கா காசு'னாலும் க‌வ‌ருமெண்ட்'லே இருந்து வ‌ருது'லே"

"இன்னொரு த‌ட‌க்க‌ அங்க‌ன‌ போற‌தா கேள்விப்ப‌ட்டேன்,மிதி வாங்கிருவே.. மொத‌ல‌ அந்த‌ க‌ட்டைய‌ன் கூட‌ சுத்துற‌த‌ நிறுத்து."

"யாருடி அது?"

"அதுதான் அந்த நாலடியான், முத்தாசாரி ம‌வ‌ன்"

"அவ‌ன் என்ன‌ ப‌ண்ணினான் ஒன்ன‌? என்னிக்கோ ஒருநா தொண்டை ந‌னைப்போம், அதுக்கூட‌ ஒன‌க்கு பொறுக்க‌ல‌யா? அவ‌னை சொன்ன‌தும்தான் ஞாப‌க‌ம் வருது? எங்க‌டி நான் கொடுத்த‌ மீன் டாலரை"

"இருக்கு, ஏன் போட்டுதானே இருக்கேன்"

"ஹிம், அவ‌ங்கிட்டே பெச‌லா செய்ய சொன்னேன்"

"என்ன‌ பெரிய‌ பெச‌லு, அதுலே"

"நிச மீனு மாதிரி துள்ளுது'லே, உள்ளுக்குள்ளே கெட‌க்குற‌ப்போ ரெண்டு ப‌க்க‌த்திலேயும் தொட்டு ம‌ணிய‌டிக்கும் பாரு"

"ச்சீய்ய், அதுக்குதான் அன்னிக்கு வாங்கியாந்து இப்போ ச‌ங்கிலியிலே மாட்டிக்க‌ன்னு அட‌ம்பிடிச்சியா, ராஸ்க‌ல், பார்க்க‌தான் ஊமைக்கொட்டான்,ஆனா செய்யுற‌ வேலை பூராவும் க‌ள்ள‌த்த‌ன‌ம்"

"எப்பிடி அய்யவோட திற‌மை... எப்ப‌வும் என்னை நினைச்சிட்டே இருக்குற‌மாதிரி கொடுத்துருக்கேன், அப்பிடியே நீயும் உன்னை நினைச்சிட்டே இருக்குற‌மாதிரி இறுக்கி ஒன்ன கொடேன்"

"போடா நீ சொன்ன‌திலே இருந்து கூசிட்டே இருக்கு,ஒன்ன‌ப்ப‌ர்க்க‌ வெக்க‌மா இருக்கு, நான் வீட்டுக்கு போறேன்"

"அடியேய், இருடி, ஓடாதே, நம்ம‌ க‌லியாண‌த்துக்கு ஏதாவ‌து வ‌ழி இருந்தா சொல்லிட்டு போ"

"சாமி சொல்லிருச்சு'லே, ந‌ட‌க்கும் பாரு"னு வ‌ர‌ப்புதாண்டி ஊருக்குள் ஓடினாள் அங்கு.

அதன்பின்னர் தினமும் சந்திப்பதும்,பொய் சண்டையிட்டு கொள்வதுமாய் கழிந்த நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமையில் அங்கு வீட்டில் பெரிய களேபரம் ஆனது. ஊரிலே இருக்கும் அனைத்து மக்களும் அவளது வீட்டினில் கூடினர். சாதரணமாக செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் அங்கு'வின் அம்மா சாமியாடி குறி சொல்லுவாள். அதை சுற்றியுள்ள மக்கள் தங்களது குறைதீர்க்க வந்து அதை கேட்டு செல்வர். என்றும் இல்லாத அந்த வெள்ளிக்கிழமையில் அங்கு'விற்கே சாமி வந்திறங்கியது.

"ஏண்டி, இம்புட்டு படிச்சிருக்கா, இவளுக்கா சாமி வந்து இறங்கிருக்கு?"'னு யாரோ கேட்க

"ஏன் சாமி, படிச்சவ, படிக்கதாவா, தாலியறுக்காதவ, அறுத்தவா'னு பார்த்தா வந்திறங்கும்"ன்னு இன்னொரு பெண்மணி வாயடைத்தாள்.

"தாயே, எந்த ஊரு சாமியாத்தா நீ? அவ கலியாணம் ஆவாத கன்னிபொண்ணு'ம்மா, அவளை விட்டு மலை ஏறிருமா"ன்னு ஊரு பூசாரி அங்கு மேலே விபூதி அடிச்சிகொண்டுருந்தார்.

"நானு எதுக்கு ஏறனும், எனக்கு பூசை போட்டு எத்தனை நாளாச்சு, காலம்காலமா செஞ்சுட்டு ஒறமொறய ஒழுங்க செஞ்சீங்களா"

"தாயே, அது அங்காளி,பங்காளி,மச்சான்மாமனு உறவு வைச்சி முறை செஞ்சு பூசை பண்ணுறதுமா, இதுகதான் சண்ட போட்டுக்கிட்டு திரியுதுக, எங்கனம்மா பூசை வைக்க?"

"அந்த வம்ச உறவுமுறைக எல்லாரும் செழிக்கனுமின்னா படைய(ல்) போட்டு பூச பண்ண சொல்லு"

"ஆகட்டும்மா, இனிமே வருசவருசம் மச்சான், மாமான்னு உறவுமுறை மாத்தி பானை தூங்கியாந்து படையல் வைக்க சொல்லுறேன்'ம்மா"ன்னு அங்குவுக்கு சாமிய மலையேத்திய பூசாரி அங்குவின் அப்பாவிடம் பேசலானார்.

"ஏலேய், அய்யா, ஒங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைக்கு ஒங்களுக்கு பொறந்த இந்த புள்ளக வாழ்க்கையிலே சீவிக்கவிட பண்ணிறாதிங்கய்யா, ஒன்னோட மவனும் கலியாணம் ஆவலை, இந்தா ஒன்னோட மவளுக்கும் கலியாணம் ஆவல, கலியாணம் ஆவாத பிள்ளக்கெல்லாம் சாமி இறங்க கூடாதுய்யா, இறங்கி தங்க ஆரம்பிச்சிருச்சான்ன அப்புறம் போகவே போவாது, ஒன்னோட மச்சானை சமாதானப்படுத்தி வர்ற வைசாசி'லே பூச போட வழியே பாருங்கய்யா, அவனும் மூத்தபொண்ணை இப்போதானே கலியாணம் முடிச்சி வைச்சிருக்கான், கல்யாண வயசிலே பையன் வேற வைச்சிருக்கான், நான் சொல்லுறத சொல்லிட்டேன், வம்சம் தளைக்கிறதுக்கு வழியே பாருங்க"ன்னு முழங்கி முடித்தார் ஊர் பூசாரி.

அடுத்து வந்த வைகாசியிலே ஊரே திரண்டு அந்த கிராமத்து மாரியம்மன் கோவிலில் பூசை போட்டு கொண்டுருந்தது.

"ஏண்டி, ஒனக்கு எப்பிடிடீ தீடீரென்னு சாமியெல்லாம் வந்து இறங்குச்சு, படிச்ச படிப்பு பத்தலன்னு டாக்ட்ரெட்'லாம் பண்ணிட்டு இருக்கே? ஒனக்கா சாமி வருது?'னு அழகுசுந்தரம் கேள்வி கேட்டான்.

"காரியம் சாதிக்கனுமில்ல, சாமியாடிறது பெரிய வித்தையா என்ன, கண்ண மூடிக்கிட்டே கைக்கால ஆட்டி கத்த வேண்டியதுதானே, சின்னவயசிலே இருந்து எங்காத்தா ஆடுறத பார்த்திட்டுதானே இருக்கேன்"

"அடிப்பாவி அது பொய் சாமியா???"

"ஆமாம், அதுக்கு என்ன இப்போ?"

"திருட்டு சிறுக்கிடீ நீயி? ஒங்கப்பனை எதுக்குடி அடிச்சே?"

"எத்தனி நாளு கோவம் தெரியுமா, எப்போ பார்த்தாலும் எல்லாத்துக்கும் மொரண்டு பிடிச்சிட்டு திரிஞ்சது, இப்போ ரெண்டு அடிய போட்டு, வம்சம் செழிக்க வழிய பாருன்னு சொன்னதும் ஒழுங்க செஞ்சுருச்சு பாரு, ஒங்கப்பன் அங்க இல்ல, இருந்துருச்சுன்னா அதுக்கும் ரெண்டு விழுந்திருக்கும்"

"அடிபாவீ.. சாமியாடுற பொம்பளக எல்லாம் உண்மையான சாமில்லாம் வந்து இறங்கி ஆடுறது இல்லய்யா? அப்பிடின்னா இப்போ அடிக்கடி சொல்லுவியே கோதைன்னு, அந்த சாமிய ஒனக்குள்ளே இறங்கி ஒரு ஆட்டத்தை போட சொல்லு? கற்பூரமா, கமலமா'னு கண்டுபிடிச்சிறலாம்"

"ஊமைக்கொட்டான், ஒன்னயும் இந்த ஊரு நல்லவன்னு நம்பிட்டு திரியுது பாரு'னு சிரிக்க ஆரம்பித்தாள் புது மணப்பெண் அங்கயற்கண்ணி அழகுசுந்தரம்.