Wednesday, February 27, 2008

நேயர் விருப்பம்

அடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே'ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்'ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு'ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு முன்னால் நிற்கும் பஸ்ஸில் எழுத்தை படிக்க பட்ட பாட்டை நினைத்து பொறுமி கொண்டிருந்தான். அதே உருவம் தான் நிற்கும் பக்கத்தை நோக்கியே வர உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வெகுவான ஆச்சரியத்தோடு அவனை அப்பிடியே கத்திக்கொண்டே போயி கட்டிக்கொள்ளும் அளவுக்கு பாசம் உந்த அது அவந்தானா பக்கத்தில் வந்ததும் கன்பார்ம் செய்துவிட்டு செய்யலாமென வெகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

"அட தனா கண்னு, நீதானா அது தூரத்திலிருந்து பார்க்கிறப்போ யாரோ மாதிரி தெரிஞ்சயேப்பா! பாரு கும்பிடப்போன சாமியே நேரா வந்த கணக்கா இங்கன நிக்கிறே, ஒன்னப்பார்க்கதான் தாரப்புரம் வந்தேன்."

இவனா இன்னும் உசுரோடதான் இருக்கானா? தான் பார்க்கிறது கனவா நிஜமான்னு வெகுவான ஆச்சரியத்திலே அவனையே பார்த்துக்கொண்டுருந்தான் தனபால்.

"என்னா இப்பிடி பார்க்கிறே? இன்னும் நான் உசுரோட இருக்கேன்னு பார்க்கிறீயா?"

"சே ச்சே, அப்பிடி இல்லடா நாகு, நாமே சந்திச்சே பத்து வருசத்துக்கு மேலே ஆகிப்போச்சே, அதுதான் கொஞ்சம் குழப்பமா இருந்தேன்."

"நான் வேலைக்குன்னு சவுதி போயி பத்து வருசத்துக்கு மேலே ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அம்மா செத்தப்போ இங்க வந்தேன், அதுக்கப்புறம் இப்போதான் இங்கயே வர்றேன்."

"என்னாது அம்மா இறந்துட்டாங்களா? அதைக்கூட சொல்ல மாட்டியா நீயி? என்னம்மோ போடா, அந்த பிரச்சினை ஆனதுக்கபுறம் நீ சொல்லாமே கொள்ளாமே ஊரை விட்டு போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு, நீயும் நானும் நாலு வருசத்துக்கு மேல ஒன்னா இருந்தும் அந்த பிரச்சினைக்காக அப்பிடியா ஓடிப்போறது?"

"சரி நான் முடிஞ்சு போன பிரச்சினையே பத்தி பேச வரலை, ஒன்னய பார்த்து போகலாமின்னு கோயம்புத்தூரிலே இருந்து இங்க வந்துருக்கேன், பக்கத்திலே அழகா ஒரு குட்டிப்பொண்ணு நிக்கிறாங்களே? இவங்க யாரு?"

"ஹிம், இவங்கதான் என்னோட பொண்ணு, மூணாவது படிக்கிறாங்க, பேரு சவுந்தர்யா, இன்னிக்கு சனிக்கிழமை'கிறதுனாலே அம்மணிக்கு லீவு. கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் என்னையும் கூட்டிட்டு போங்கன்னு வந்தாங்க"

"அப்பிடியா இனிமேதான் போகப்போறியா?"

"இல்ல இல்ல, போயிட்டு வந்தாச்சு, இப்போதான் பஸ்ஸிலே இறங்கி வந்து நின்னுட்டு இருக்கேன், நீ அடுத்த பஸ்ஸிலே இங்க வந்து இறங்கிறே"

"சரி இங்கயே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கே? வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகமாட்டியா?"

மெல்லமாய் சிரிப்பை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட் வெளியே வாகனகாப்பகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மூவரும். வரும் வழியில் தற்போது சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பதாகவும் அதற்குண்டான ஸ்டாக் எடுக்கதான் கோவை வந்ததாகவும் நாகுவிடம் சொல்லிக்கொண்டே வந்தான் தனபால்.

"விஜி, இவந்தான் நாகராஜ், அடிக்கடி சொல்லுவேனே? அவந்தான் இவன்"ன்னு தன்னுடய மனைவியிடம் நாகராஜனை அறிமுகப்படுத்தினான்.

"நானும் இவனும்தான் ஒன்னா கோயம்புத்தூர் மில்'லே எலக்ட்ரிசியனா வேலை பார்த்தோம். கொஞ்சநாளிலே எனக்கு சவூதி'லே வேலை கெடைச்சிருச்சுன்னு அங்க போயிட்டேன்"

"ஹிம் ஒங்களை பத்தி சொல்லியிருக்காங்க, நீங்களும் இவரும் ஒன்னா திண்டுக்கல் பாலிடெக்னிக்'லே படிச்சி முடிச்சு கோயம்புத்தூர் வந்து வேலை பார்த்தது, தனியா வீடு எடுத்து தங்கினது'னு எல்லாமே சொல்லியிருக்காங்க"

தனபால் மனைவி இதை சொல்லிமுடித்ததும் சற்றே சந்தேகத்திடனே நாகராஜன் அவனை உற்று நோக்க ஆரம்பித்தான். சமையல் வேலையாய் அவள் உள்ளே போக தன்னுடைய சந்தேகத்தை கேட்டுறலாமின்னு என பேச ஆரம்பித்தான்.

"அடேய் தனா எல்லாத்தையும் சொல்லிட்டியா?"

"எல்லாமே சொல்லிட்டேன், ஆனா அந்த பிரச்சினையே மட்டும் சொல்லலை!"

"ஹிம், எப்பிடிடா இருக்கா அவ? நல்லாயிருக்காளா? சந்தோசமா இருக்கா இல்ல?"

"ஒருதடவை கோயம்புத்தூரிலே வேலை விசயமா போனப்போ அவ காரிலே போறத பார்த்தேன், என்னையே அவளும் பார்த்துட்டா போலே, கொஞ்சதூரம் போன காரை கூட திரும்ப வர்ற வைச்சி என்கிட்டே பேசிட்டு போனா, நல்லாயிருக்காளாம், பீளமேடு பக்கத்திலேதான் வீடு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டா என்னாலேதான் போகமுடியல"

"ஓ, நான் அவளை பார்க்கலாமாடா?"

"இதேதான் அவளும் என்கிட்டே கேட்டா? நாகு எப்பிடியிருக்காங்க? கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டா? அட நானே கேட்கமறந்து போயிட்டேன், கல்யாணம் ஆகிருச்சாடா ஒனக்கு? எங்க வீட்டை சவூதி'லே செட் பண்ணிட்டியா?"

"இல்லய்யா, அம்மாவும் எட்டு வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி அலுத்து போயி செத்தே போயிட்டாங்க, நான் இப்பிடி பண்ணுறேன்னு அக்காவும் என்கிட்டே பேச்சை நிப்பாட்டி வருசத்துக்கு மேலா ஆகிப்போச்சு, ஒட்டு சொந்தமே என்னை புரிஞ்சுக்கலை, நான் என்ன பண்ணுறது?"

"ஹிம் என்னதான் பெரிய வருத்தமிருந்தாலும் நாப்பது வயசு வரைக்கும் கலியாணம் பண்ணாமலே'வா இருக்கிறது?"

"என்னாடா பண்ணச்சொல்லுறே? மறக்க முயற்சி பண்ணாலும் முடிய மாட்டங்கிதே? எங்க விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவ அப்பா ரோட்டிலே வைச்சி என்னை தாறுமாறா திட்டுனது? நம்ம வேலை பார்த்த மில்'க்கே வந்து அவங்க அண்ணனுங்க அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டும் அவளை மட்டும் என்னாலே மறக்கமுடியலை'யேடா!"ன்னு கண்ணோரத்தில் எட்டிப்பார்த்த ஈரத்தை மெல்லமாய் துடைத்து கொண்டான்.

"நாகு எனக்கு புரியுதுடா,, அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காமே இருக்கிறது நல்லாவா இருக்கு? இப்போ உனக்குன்னு இருந்த அம்மாவும் இல்லை, அக்காவும் பேசுறது இல்லன்னு சொல்லுறே? அப்போ வர்றப்போற காலங்களிலே ஒனக்குன்னு யாருடா இருக்கா?"

"எல்லாம் விதி படியே நடக்கட்டுமின்னு நானும் அதுப்படியே போயிட்டு இருக்கேன்"

"அப்பா அப்பா, நான் கேட்ட பாட்டை சூரியன் FM'லே போடுறாங்கப்பா'ன்னு சந்தோசமாக ஓடி வந்தாள் தனபால் மகள்

"என்னாடா இன்னுமா ரேடியா'லே நேயர்விருப்பம் போடுறாங்க"ன்னு ஆச்சரியத்தோடு கேட்டான் நாகு.

"ஆமாம், இப்போ FM ரேடியோ வந்ததுக்கபுறம் அந்த விருப்பம் இந்த விருப்பமின்னு போனிலே பேசி தள்ளுறாங்க! நம்ம காலத்திலே போஸ்ட் கார்ட்'லெ எழுதி போட்டு தினமும் சாயுங்காலம் இன்னிக்காவது நம்ம பேரை சொல்லி பாட்டு போட்டுருவாங்களான்னு காத்து கெடப்போமே"

"நீ இதை சொன்னதும் தேவி நினைப்புதாண்டா வருது. தினமும் பத்து கார்டு அனுப்புவாளே? ஒருதடவை என் பெயரையும் அவ பேரையும் சேர்த்து எழுதி காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி பாட்டு வேணுமின்னு எழுதி போட்டிருக்கேன்னு சொன்னா, அது வந்துச்சான்னுகூட தெரியல."

"ஆமாம் இந்த நேயர் விருப்பம் கேட்கிறதுலே அவதானே தீவிரமா இருப்பான்னு சொல்லுவியே? நாமே தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலே இருந்தாலும் என்கிட்டே ஒருநாளும் பேசினது இல்லை. எப்பாவது நீயும் நானும் வெளியே போயிட்டு வந்தாலும் என்னை பார்த்தாலே அமைதியா போயிருவாளே! எப்பிடிடா லவ்'லாம் பண்ணீங்க, அதுவும் பாட்டெல்லாம் நேயர்விருப்பத்திலே போடுற அளவுக்கு பேசினீங்க?"

"அதெல்லாம் எப்பிடியோ பேசுவோம்.அவளுக்கு இளையராஜா'ன்னா ரொம்ப பிடிக்கும்,அதுவும் கார்த்திக் நடிக்கிற படத்துக்கு இளையராஜா மீயூசிக்'ன்னா ரொம்பவே விரும்பி கேட்பேன்னு சொல்லுவா! பனிவிழும் மலர்வனம் ரேடியோ'லே நேயர்விருப்பத்திலே வந்துச்சுன்னா அதிலே இவ பேரு கண்டிப்பா இருக்கும்."

"ஹிம் அவ சொன்னாதானே நீயி மூக்குக்கு கீழே கொஞ்சமா மீசைய சேவ் பண்ணிட்டு திரிஞ்சே, இப்போ என்னாடா'ன்னு காட்டான் மாதிரி கட்டு மீசை வைச்சிட்டு திரியிறே. "

"ஆமாம் அவளுக்கு கார்த்திக் பிடிக்கிறதுக்காக அப்பிடி இருந்தேன். இப்போதான் நான் தேவதாஸ் ஆகிட்டேனே? ஆனா சரியா ரோமக்கட்டு இல்லாதுனாலே தாடிதான் சரியா வரமாட்டேங்கிது"

"இன்னும் அந்த நக்கல் பண்ணுற பேச்சை விடலடா"ன்னு பேச்சுக்கு சொன்னாலும் அவனுடைய கண்கள் பனிக்க எத்தனிக்கும் தருணத்தையும் கவனித்தான் தனபால்.

"தனா நான் இங்க வந்ததே ஒன்னய பார்க்கிறதுக்கும் முக்கியமா அவளை பார்த்து விசாரிக்கிறதுக்கும் தான் வந்தேன். அவ வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் ஒருக்கா அவளை பார்த்துட்டு வந்திறேன்."

"அட்ராஸ்தானே தர்றேன். அதுக்கு முன்னாடி நான் இந்த எட்டு ஒன்பது வருசமா அனுபிவிக்கிற கொடுமையே நீயும் அனுபிவிக்கனும்"

"என்னடா அது"

"அட ஒன்னுமில்லடா, அம்மணி சாப்பிடக்கூப்பிடுறாங்க, வா போயி சாப்பிடலாம்."

"சரி அப்போ நான் அவளை பார்க்கிறதுக்கு ஒனக்கு ஒன்னும் ஆட்சோபணை இல்லைலே?"

"ஹிம் அதெல்லாம் இல்லை, நீ தாரளமா போயி பார்த்துட்டு வா, இப்பவே சாப்பிட்டு போயிட்டு கூட வா, நான் சாயுங்காலமா சென்னை போறேன், நீயும் என்கூட வந்தேன்னா எனக்கு கொஞ்சம் துணையா இருக்கும். ஒரு பல்ப் கம்பெனிகாரன் டீலர்ஷிப் தாரேன்னு சொல்லியிருக்கான், அவனை போயி பார்த்து பேசனும்."

மதிய உணவிற்கு பிறகு தனபாலிடமிருந்து அட்ரஸ் வாங்கிகொண்டு திரும்ப வர்றேன்னு கிளம்பி போனான் நாகராஜன். தேவியின் வீட்டை பீளமேடு'ல் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக எல்லாம் சிரமமபடவில்லை அவன். வீடு என சொல்லுவதை விட பெரிய பங்களா போலே இருந்தது, தயங்கி தயங்கி அங்கே போயி வெளியே நின்ற கூர்கா'விடம் தேவியை பார்க்க வேண்டி அவளுடைய அனுமதிக்கு பிறகு வீட்டுக்குள் சென்றான் நாகராஜன். பத்து வருடத்துக்கு முன்னர் பார்த்த அதேமாதிரியே இருந்தாள் தேவி. இன்னமும் படிய வாரிய கூந்தலும், மல்லிகை பூவும், மேல் நெத்தியில் சந்தனகீற்றும், இரு புருவங்களுக்கு சற்றே மேலே விரல் நுனி அளவு குங்குமமும், இப்பொழுது சற்று புதிதாக உச்சி நெற்றியிலும் குங்குமமும் வெகுபாந்தமாய் இருந்தாள். பேசுவதற்கு எந்த வார்த்தை கொண்டு ஆரம்பிப்பது'னு இருவரும் தடுமாற இருவர் வாயிலும் நல்லாயிருக்கியான்னு வந்து உதிர்த்தது.

"நான் நல்லா இருக்கேன் தேவி... நீ எப்பிடியிருக்கே? ஒன்னோட புருசன் என்ன பண்ணுறாரு?"

"எனக்கென்னா நான் மகாராணியாட்டாம் இருக்கேன், அவரு இங்க வாட்டர் பம்பு மேன்பாக்சரிங்க் பண்ணுற பிஸினஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"நான் சவூதி'லே ஒரு கம்பெனியிலே எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்'லே இருக்கேன். லீவு'லே இங்க வந்தேன். வந்த இடத்திலே தனா'வே பார்க்கலாமின்னு வந்தேன். அவந்தான் ஒன்னோட அட்ரஸ் கொடுத்தான், அப்பிடியே பார்த்துட்டு போலாமின்னு வந்தேன்."ன்னு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாய் மனதிற்குள் என்ன பேசவேண்டுமென நினைத்தை அப்பிடியே அவளிடம் ஒப்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் கண்கள் கலங்கிட கூடாது. வார்த்தைகள் வர கஷ்டப்படும் அளவுக்கு போயிறக்கூடாது'ன்னு உறுதியாக இருந்தான்.

"நீங்க முன்னப்பார்த்த மாதிரியே அப்பிடியே இருக்கீங்க, மீசைதான் பெருசா வைச்சிருக்கீங்க. இப்போ வந்த அம்மணிக்கு இப்பிடியிருக்கிறதுதான் பிடிச்சிருக்கா என்னா'ன்னு கேட்டு வெகுளியா சிரித்தாள் தேவி. ஆனால் இவனுக்குதான் கஷ்டமாக இருந்தது. இவனது முகம் போன போக்கை கவனித்த அவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

"இப்போல்லாம் கூட நான் நேயர் விருப்பத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு தான் இருக்கேன். முன்னாடி ஒரேயொரு கோவை ரேடியாதான், ஆனா இப்போ டிவி,FM ரேடியோ'ன்னு எல்லாத்திலேயும் இது போடுறாங்க இல்லே, எல்லாத்திலையும் லெட்டர் அனுப்பிட்டுதான் இருக்கேன்'ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். இன்னமும் அவளிடம் நிறையவே பேசவேண்டுமென நினைத்தாலும் நேரம் நெருங்க ஆரம்பித்ததும் தனா என்னை சென்னைக்குகூட வர சொல்லி கூப்பிட்டு இருந்தான். நான் கிளம்ப வேண்டியதா இருக்கு'னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பினான் நாகு.

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்'லில் இருந்து சென்னை போகும் பஸ்க்கு அருகில் வெயிட் பண்ணுவதாக தனபால்'க்கு போன் செய்தான். இரவு பஸ் பயணத்திடனுடயே "நாகு தேவியை பார்த்து பேசினியா என்னா சொன்னா?'ன்னு கேட்ட தனபாலை கலங்கிய கண்களோடு பார்த்தான் நாகு.

"ஹிம் நல்லா இருக்காடா! அவ்வளவு பெரிய வீட்டிலே மகாராணியாட்டாம் இருக்கேன், சந்தோசமா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டே இருந்தா, இன்னமும் நேயர் விருப்பத்துக்கெல்லாம் லெட்டர் போடுறதா சொல்லிட்டு இருந்தா"

"அப்புறம் என்னாடா, நீ எதுக்கு அப்செட் மூடு'லே இருக்கே? இன்னமும் அவ நேயர்விருப்பத்திலே கேட்கிற பாட்டெல்லாம் ஒன்னாலே அவ பெயரோட கேட்கமுடியலன்னு வருத்ததிலே இருக்கியா? இப்பவே சொல்லு, இப்பவே நைட்'லே கூட நேயர் விருப்பம் வருது அதிலே அவ பெயரை சொல்லி பாட்டு போட சொல்லிருவோம்."

"உனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல'டான்னு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தான் நாகு.

"டேய் டேய் எதுக்கு அழுவுறே? இது பஸ்'டா, எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க, என்னா ஆச்சு'னு சொல்லு"

"தனா தனா, கிளம்புறப்போ என்னை விட்டு தூரமா நின்னுட்டு அவ்வளவு நேரமா சிரிச்சிட்டு இருந்தவா அழவே கூடாது'ன்னு அவளோட உணர்ச்சிய கட்டுப்படித்திக்கிட்டு..." சொல்லி விசும்ப ஆரம்பித்தான் நாகு.

"தேவி அப்பிடி என்னாதான் சொன்னா?"

"ம்ம்..ம்ம்...ஒங்க பேரு வைச்சி கூப்பிட எனக்கொரு புள்ள இல்லாத அபாக்கியசாலியா இருக்கேன்னு சொல்லி கண்ணுலே தண்ணி வந்து அதை அடக்கமுடியாமே உள்ளே ஓடிட்டா"ன்னு சொல்லி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான் நாகு.

இந்த மனநிலையிலிருக்கும் நாகுவை என்ன சொல்லி தேற்றுவதுன்னு வெகுவான குழப்பதின் உச்சியில் அமைதியானான் தனபால்.பஸ்ஸில் இரவு நேரத்தில் கசியும் பாடலில் காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி ஒலிக்க ஆரம்பித்தது.

Tuesday, February 5, 2008

எந்த பறவை எழுதியிருக்கும் இந்த கடிதத்தை?

நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல... உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

இரண்டு வாரத்துக்கு முன்னர் வெளிவந்த ஆனந்தவிகடனில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி எழுதிய அகமும்புறத்தின் தொடக்க வரிகள் இவை. இந்த இரண்டு வரிகள் நம்முடைய தகவல் பரிமாற்றத்தின் அழகியலை தொலைத்து போன வெறுமை மனதிற்குள் மெல்லமாய் படர்கின்றது.


Success in sight....

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே
எந்த கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.

இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்த பறவை எழுதியிருக்கும்
இந்த கடிதத்தை?

-வண்ணதாசன்

இந்த கவிதை படிச்சதும் என்னை என்னோமோ பண்ணிச்சு... இளமைப்பருவத்தில் என்னுடைய தம்பி எங்கள் சித்தப்பா வீட்டில் வளர்க்கப்பட்டான். அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவனைதான் எட்டாம் வகுப்பு படிப்பு வரை வளர்ந்தார்கள். அதன்பின்னர் நானும் என்னுடய அக்கா எங்கம்மா எல்லாரும் அடம்பிடித்து எங்களுடைய வீட்டிலே கொண்டுவந்தோம். மூன்று வயதிலே இருந்து எங்களை விட்டு போன அவனை பெரும்பாலும் பார்ப்பது தீபாவளிக்கும், முழு ஆண்டு விடுமுறையிலும் தான். தீபாவளி வரும் மாதத்திற்கு முன் மாதம் முதலில் எங்களுடைய ஆரம்பிக்கும் அந்த செயின் லெட்டர்ஸ் பரிமாற்றங்கள். முதலில் அவந்தான் சித்தப்பா எழுதும் கடிதத்தில் கடைசியில் அழகான தன்னோட கையெழுத்திலே ராமூர்த்தீ இந்த தீவாளிக்கு நாமே நூறு வாலா ரெண்டு வாங்கி நீ ஒன்னு நா ஒன்னு வைக்கலாமின்னு எழுதுவான். அதுக்கப்புறம் சித்தப்பா எழுதியதுக்கு அப்பா எழுதும் பதில் லெட்டரிலே நானும் எங்கக்காவும் கொஞ்சமும் எழுதுவோம். எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்பதினால் பென்சிலில்தான் எழுதுவது. அப்பா பதில் எழுதிவிட்டு இந்தாடா நீயும் எழுதிட்டு போஸ்ட் பண்ணிருன்னு கொடுப்பாரு. அதை வாங்கியதும் எனக்கும் எங்க அக்காவுக்கும் முதலில் சண்டை வரும், யாரு முதலிலே எழுதுறதுன்னு! ஒரு வழியா சமதானம் ஆகி யாராவது எழுத ஆரம்பிப்போம். அதிலே நானாவது என்னோட அக்காவது போன வாரம் பெரிய சண்டை வந்து நான் அவளை அடிச்சிட்டேன்னு நானோ இல்ல என்னோட அக்கா அவனை அடிச்சிட்டேன்னு எழுதாமே அந்த லெட்டரை முடிப்பது இல்லை. சிலசமயங்களிலே எங்கப்பா அதை படிச்சிட்டு சிரிச்சிட்டே பசங்களா என்ன என்னா'டா இன்னமும் எழுத பாக்கி இருக்கு'ன்னு கேட்பாரு? அப்போல்லாம் ஒன்னுமே புரியாது. இப்போதான் நிறைய புரியுது...

இதேமாதிரி எங்க அப்பத்தா சித்தப்பா வீட்டிலே இருந்தா எங்களுக்கு லெட்டர் எழுதுனுமின்னா என்னோட தம்பிதான் எழுதி தருவான். அப்பத்தா'வுக்கு எழுதப்படிக்க தெரியாது. அதுனாலே அவங்க சொல்ல சொல்ல அவன் எழுதுவான். சில சமயங்களிலே பஸ்ஸிலே பிராயணம் பண்ணினது அப்புறம் அங்க ஆஸ்பத்திரிக்கு போயி டாக்டரை பார்த்ததுன்னு என்னத்தாயவது அப்பத்தா சொல்லும். இவனும் அதெய்யல்லாம் கேட்டு அப்பிடியே எழுதிட்டு கிழே சின்ன சின்ன கமெண்ட்ஸ் எல்லாம் போடுவான். அதை படிக்கிறப்போ நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். அந்த லெட்டருக்கு நானும் எங்க அக்காவும் ரீப்ளை பண்ணுறோப்போ அதை மாதிரிதான் கமெண்ட் எல்லாம் போட்டு எழுதுவோம். அந்த கடிதங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நைட் வர மகாபாரதம், இராமயாணம் தொடரை பற்றிதான் இருக்கும். அப்பத்தா எங்க வீட்டுலே இருந்தா நானு,அக்கா எல்லாரும் சேர்ந்துதான் பார்ப்போம். அப்போ நீயூஸ்பேப்பரிலே அந்த தொடருகளோட தமிழ் வசனம் வரும். அதை படிச்சிக்கிட்டே அந்த தொடர் பார்க்கிறது அப்பிடியொரு சுவராசியமா இருக்கும், அப்பத்தா ஊருக்கு போயிட்டா இதை படிச்சி சொன்னியா, அவரு அம்பு விடுறோப்போ இந்த வசனத்தை அப்பத்தா'கிட்டே சரியா சொன்னீயான்னு லெட்டரிலே எழுதுவோம். இன்னும் என்னோம்மோ இருக்கு. இப்போ டைப் பண்ணதான் முடியல.

இப்போல்லாம் எழுதறதோ இல்லை அந்த இண்லாண்ட் லெட்டரை பொறுமையா மடிச்சு ஒட்டுறதுக்கெல்லாம் முடியுமான்னு தெரியலை. படிப்புக்கப்புறம் இப்பவும் நாங்க வெளியூருலேதான் இருக்கோம். இன்னமும் கடிதப்போக்குவரத்து நடக்குது. அது என்ன வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்துக்கு உண்டான செக், அதை போஸ்ட் இல்ல கொரியர் அனுப்பிட்டு உடனே மொபலிலே அவனுக்கு கால் பண்ணி லெட்டர் வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுன்னு வைச்சிரதுதான்..... :(

Monday, February 4, 2008

2007 - எழுதியதில் பிடித்தது....

மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கோ ஏதோவொன்றை தேடப்போக தமிழ்வலைபூக்களை தெரியவர அன்றிலிருந்து வேலை நேரத்தை தவிர இங்குதான் பொழுது போக்கு. அதிலும் தமிழில் முதன்முதலில் எழுதியபிறகு கிடைத்த சந்தோஷம் இருக்கே, அப்பப்பா இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. அதுவும் திணமணி நாளிதழில் போட்டோவெல்லாம் வந்த அந்த பெரிய பிரமிப்பெல்லாம் இன்னும் அடங்கவில்லை. பதிவுகள் எழுத ஆரம்பித்து இரண்டுவருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஆறு குழுப்பதிவுகளிலும் இணைந்தாயிற்று, அதில் இன்னும் இரண்டு - மூன்று பதிவுகளில் எழுதவே ஆரம்பிக்கவில்லை. எனக்கும் டைம் மேனஜ்மெண்ட்'க்கும் ஒத்து வரவே வராது. கிடைக்கிற நேரத்தை சரியாக உபயோகப்படுத்திக்கவும் தெரியாது. போன வருடத்தில் நிறைய பதிவுகளும் சிறுகதைகளும் மதுரை மொழி நடையில் எழுதனுமின்னு ரொம்பவே மெனக்கெட்டேன். கடைசிவரை முடியாமலே போனது.

போனவருடத்தில் மொத்தமாய் வைகையில் எழுதிய நாப்பத்தி முன்று சொச்சம் பதிவுகள், சங்கத்தில் பத்து, தேன்கிண்ணத்தில் கொஞ்சம்,சுவரொட்டியில் ஒட்டியது கொஞ்சமின்னு நூறை தாண்டியது. அதில் உருப்படியாக எழுதியாக என்ன எழுதியிருக்க போறேன்னு என்னால் ஏதுவும் எடுக்கமுடியவில்லை. எதையும் உருப்படியாக செய்திருந்தால் தானே அதை எடுத்துக்காட்டி பெருமைப்படலாம். காதல் கவிதைகள் எழுதுறேன் பேர்வழின்னு படிக்கிற காலத்திலே டைரிலே கிறுக்கினதை நண்பர்கள்கிட்டே காட்டி பெருமைப்படுவேன். அதிலிருந்து ரெண்டு மூணு கவிதைகளை இங்கயும் போட்டேன். வழக்கம்போல எல்லாரும் அதை கும்முன்னு கும்மி இனிமே எந்த காதல் கவிதைகளையும் பிளாக்'லே போடவேகூடாதுன்னு கொள்கை முடிவு எடுத்துட்டேன்... :)

அப்புறம் இந்த சிறுகதைகள் எழுதியதுன்னா பிளாக்'லே எழுதிய முதல் கதைக்கே தேன்கூடு போட்டியிலே நான்காம் பரிசு கிடைக்க அந்த வேலையாவது உருப்படியாக செய்யனுமின்னு கொஞ்சநாளு மெனக்கெட்டு எழுதிய இந்த கதைக்கு வழக்கம்ப் போலே இது உன்னோட சொந்த கதையா'ன்னு கேட்டு அன்னிலிருந்து கற்பனா கதாப்பாத்திரத்தை என்னோட வருங்கால மனைவி பெயர்'ன்னு சொல்லி எங்க போனாலும் இப்போ மகா எப்பிடியிருங்கன்னு கேட்கவைச்சிட்டாங்க... :( இந்த வேலைய செய்த புண்ணியவானுகளா நல்லாயிருங்க நல்லாயிருங்க... அதற்கு பின்னர் என்னோட சித்தப்பா பொண்ணு மரணத்தை கருவாக வைத்து எழுதிய மாணிக்கமலர். அதன்பின்னர் பொழைக்கிற பொழைப்பிலே நடக்கிற விசயங்களை வைத்து எழுதிய காதல் கதையும் எழுதியதில் பிடித்ததுதான்.

ஆனால் இதையெல்லாம் மீறி எனக்கு ரொம்பவே பிடித்தது சவடன் கதைதான். அதிலே நான் எழுத வந்த விஷயத்தை தருமி ஐயா தவிர யாருக்கும் படித்த பொழுது புரியவில்லை என்று நினைக்கிறேன். மேல்சாதியை சேர்ந்த நபரும் கீழ்சாதியை சார்ந்த நபரும் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே வரும் பிரச்சினைய சுற்றியிருப்போர் எப்பிடி மேல்சாதிக்காரனுக்கு ஏத்தமாதிரி மாற்றுவார்கள் என்பதே அந்த கதையின் கரு. அதுவும் சுத்தமான மதுரை கிராமத்து மொழி நடையிலே எழுதினா மட்டுந்தான் சரியா வருமின்னு முடிவு செய்து கிட்டத்தட்ட பத்து - இருபது முறையாவது அதை திரும்ப திரும்ப படித்து சரி பார்த்து கொண்டேயிருந்தேன். கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது தப்பான அர்த்தத்தை இங்கே ஏற்படுத்தி விடும் என்பதால் மிகவும் கவனத்தோடுதான் அதை பப்ளிஷ் பண்ணிண்ணேன். பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாட்டியும் பெரிய அளவுக்கு பிரச்சினைய கொண்டு வராதுனாலே அந்த கதைதான் எனக்கு ரொம்பவே பிடித்தது.... :)


இதேமாதிரி எனக்கு பிடித்ததை நீங்களும் சொல்லுங்கன்னு நான் கூப்பிட போறது எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட குமரன் ததா.

இவரும் ஒரு வகையிலே எனக்கு கற்று கொடுத்தவர் அவருதான் கிரேட் மொக்கை புயல் செந்தழல் ரவி

எந்த கதை எழுதினாலும் இவரை மாதிரி எப்பிடியாவது எழுதியிறனுமின்னு முடிவு பண்ணி ஆரம்பிப்பேன்,வழக்கம்ப்போலே முடியாவே முடியாது. அவருந்தான் கள்ளியிலும் பால் வடித்த ஜிரா.

இவரு கொஞ்சம் ஸ்பெசலுதான் எங்க ஊருக்காரு. என்ன பதிவு போட்டாலும் மனசார பாரட்டுவாரு. அவருதான் நம்ம மதுரையம்பதி... :)

கப்பி, இம்சையக்கா வலையுலக தபூசங்கர் நவீன்'ன்னு எல்லாரும் சொன்ன வேலைய சரியா செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்... நீங்க நாலு பேரும் நான் சொன்னதை சரியாக செஞ்சுருங்க... :)

Sunday, February 3, 2008

கடவுளின் தேசத்தில்.....

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களை போன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் பொழப்பு பொழைக்கிறவனுக்கு வாரயிறுதிகளிலே மட்டுமே எதுவும் புதுசாவோ இல்லை இருக்கிற ஏதாவது மாற்றம் செய்யமுடியும். வாரயிறுதியில் அப்பிடின்னா மத்த வாரநாட்களில் மற்ற வழக்கமான வேலைகளும் ஓர்க் பிளான் தயாரிப்பதிலும் காணாமலே போனது. பொங்கல் விடுமுறை வந்த இரண்டு நாளு தவிர ஆபிசுதான் கதின்னு கிடந்தேன். போன சனிக்கிழமை உடன் வேலை பார்க்கும் மல்லுவுக்கு கோழிக்கோடில் திருமணம், சென்ற மாதமே பத்திரிக்கை வைத்துவிட்டு நீ வந்துதான் ஆகனுமின்னு கட்டாயப்படுத்த ஆபிஸ் வேலையும் சேர்ந்து பாடாய்படுத்த என்ன செய்வதென முழிபிதுங்கிதான் போனது. ஒரு வழியாக சர்வர் லைசென்ஸ் மக்கர் பண்ணதிலே போன வாரயிறுதியில் லீவு கிடைத்தது. கிடைத்த நாளை உருப்படியாக உபயோகப்படுத்தமென இடமே இல்லாத வேன்'லே ஒரமாக இடத்தை பிடிச்சு கோழிக்கோடு போயி சேர்ந்தாச்சு. அங்கயிருந்து அருகிலிருந்த கிராமத்திலேதான் அவருக்கு திருமணம். அங்க எல்லாத்தையும் ஆ'ன்னு வாயை பொளத்து பார்த்துட்டு கேரளா ஸ்டைல் சாப்பாட்டையும் வெட்டு வெட்டிட்டு ஊரை சுத்த கிளம்பிட்டோம்.

நம்ம புரட்சி போட்டோக்கிராபர் அண்ணன் CVR'ன் வழிக்காட்டுதலின் படி ஏதோ என்னாலே முடிஞ்ச அளவுக்கு போட்டோ எடுத்து தள்ளினேன்... :)

இது கோழிக்கோட்டிலிருந்து கண்ணூர் போற வழியிலே எடுத்தது. வேன் பாலத்தை கடந்து போறப்போ எடுத்ததுனாலே சரியா போகஸ் ஆகலை. வண்டியை நிறுத்தி எடுக்கலாமின்னு பார்த்தால் குறுகிய பாலம்கிறதுனாலே நெரிசலான போக்குவரத்து இருந்தது.... :(

culicut lake

கல்யாணம் முடிச்சிட்டு கோழிக்கோடு வர்ற வழியிலே இருந்த கப்பாடு பீச்'க்கு சென்றோம்.அன்னிக்கு பொழுது இருட்டியதும் கோழிக்கோடு திரும்பி புது மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணியிருந்த தீர்த்தவாரியிலே கலந்துக்கிட்டு சயனத்துக்கு போயாச்சு.

In Beach

In Beach

In Beach

Sunset

மறுநாள் காலையிலே அடிச்சி பிடிச்சி எழுந்திருச்சி வயநாடு'ஐ சுத்தியிருக்கிற எல்லா இடத்தையும் பார்த்திறனுமின்னு வெறியோடு கிளம்பி கேப் டிரைவரை போட்டு பாடாப்படுத்தியாச்சு. அந்த வகையிலே முதலிலே போன இடம் பூக்காடு ஏரி. அந்த ஏரியை சுத்தி மலைகள் சூழந்திருப்பது சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை படகு சவாரியிலே சுத்திட்டு அடுத்த இடமான எடுக்கல் குகைக்கு கிளம்பினோம்.

பூக்காடு ஏரி:-

Pookad Lake

அந்த குகைக்கு போறதுக்கு கிட்டத்தட்ட 4 -5 கிமீ மலைப்பாதையிலே நடந்து போகனும். அப்போதான் அந்த குகை வாசலையே அடையமுடியும். அதுக்கே கூட வந்தவனுகளுக்கு மூச்சு வாங்க இதுக்கு மேலே அடியெடுத்து வைக்கமுடியாது'ன்னு வெளியே உக்கார்ந்துட்டானுக. கொஞ்ச பேரு மட்டும் உள்ளே போயி வந்தோம். குணா படத்திலே வர்ற குகைய விட கிட்டத்தட்ட பத்து இருபது மடங்கு பெரிதாக இருந்தது. உள்ளே போவதற்கு மிகவும் கடினமான வாசல் வேறு. கிட்டத்தட்ட நம்ம உடம்பை மூணா மடிச்சிதான் உள்ளேயே வாசலிலே நுழையமுடியும். அதுக்கு மேலே ஏறுவதும் பாறைகளுக்கு நடுவே நடக்க வேண்டும்.

குகையின் முன்வாசல்:-




இந்த பாதை ஒரு இடத்திலே மட்டுமே இருக்கு.... மீத பாதைய பாறை வழிதான் கடக்கவேண்டும்.




குகைக்கு உள்ளே:-



குகையோட உள்பகுதியிலே சில பழங்கால எழுத்து முறைகள் இருந்தன. அங்கயிருந்த இதெல்லாம் தமிழ் எழுத்துக்கள், நீம்கள் அறியுமோ'ன்னு வேட்டி கட்டின சேட்டன் சொன்னார். நானும் உத்து உத்து பார்த்தேன். ஒன்னும் சரியா தெரியல, கண்ணாடி எடுத்துட்டு போகலை.... :)


குகைய சுத்தி பார்க்கிறதுக்கே பொழுது சாய ஆரம்பிச்சிடுச்சு. கூட வந்த ஒருத்தன் காணமே போக அவனை தேடி நாலு பேரு போக அந்த நாலு பேரை தேடி இன்னொரு நாலு பேரு போக எல்லாரும் பிரிஞ்சிட்டோம். அப்புறமென்னா குடும்பப்பாட்டை பாடி எல்லாரும் ஒன்னுக்கூடி அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.



telescope lens வழியா எடுத்த போட்டோ... ஹி ஹி ஆர்வக்கோளாறு....

On the way to suchipura falls
Form house


suchipura falls

Suchipura Falls


குகை'க்கு அடுத்து போனது சுச்சிப்புரா அருவின்னு ஒரு இடம். ஜிராசிக் பார்க் 3'ம் பாகத்திலே பாறைகளுக்கு நடுவிலே பாதை இருக்கும் பாருங்க. அதேமாதிரியே ஒரு இடம் இந்த சுச்சிபுரா அருவி. தூரத்திலே தண்ணி சத்தத்தை கேட்டதும் ஹே'ன்னு கத்திக்கிட்டே திடு திடுன்னு ஓடி பாறை மேலெயெல்லாம் ஏறி செம ஆட்டம் போட்டாச்சு. மணி ஆறரைய தாண்டியதும் வனத்துறை சேட்டன்'ஸ் எல்லாம் வந்து இங்காரு புலி வரும், பேசாமே வந்திருங்கன்னு கூட்டியாந்துட்டானுக. அருவியிலிருந்து மேலே ஏறி வர்றவரை ஒரு பூனை கூட வரலை.... :( அப்புறமென்னா அங்கனயிருந்து பெங்களூரூ ஆன ஜிலேபி தேசத்துக்கு நட்டராத்திரியிலே வந்து சேர்ந்து அவனவன் வீட்டுக்கு போயி தூங்கி மதியம் ரெண்டு மணிக்கு ஆபிஸ் வந்து மேனஜர்'கிட்டே முறைப்பு பார்வைய வாங்கினோம்.... :)