Thursday, July 12, 2007

மாணிக்க மலர்

"ஏண்டா எந்திருடா! இன்னிக்கு ஆபிஸிலே மீட்டிங் இருக்குன்னு 9 மணிக்கெல்லாம் போறேன்னு நைட் தூங்குறப்போ சொல்லிட்டு இப்போ 8 மணி வரை தூங்கினா எப்பிடி??"ன்னு ரூம்மேட் கத்தின கத்துலே எழுந்து உட்கார்ந்தான் சந்துரு.

"இன்னும்தான் ஒன் அவர் இருக்குலே! அதுக்குள்ளே கத்தி ஊரை கூட்டுறே? டீ போட்டாச்சா?"

"இவரு பெரிய தொரை ! மகாராசா எழுந்திருச்சதும் பெட் காப்பியோட எழுப்பி விடனுமா? அப்பிடியே பாத்ரூமை பார்த்து ஓடி போயிரு! சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு! நாங்கெல்லும் ஆபிஸிக்கு போகனும்!"

நண்பன் வினோத் போட்டு வைத்த டீ'யை குடித்து விட்டு காலைக்கடன்களை முடித்து விட்டு ஆபிஸிக்கு கிளம்பினான் சந்துரு.

"ஹலோ! நான் இப்போ மீட்டிங்'லே இருக்கேன்! நான் அப்புறமா கால் பண்ணுறேன்!"

"என்னடா சந்துரு! காலநேரமில்லாமே வூட்பீ கூடதான் போனிலே பேச்சுன்னா! மீட்டிங்'லே கூடவா"ன்னு கிண்டல் பண்ணிய கொலிக்'ஐ கடுப்புடனே பார்த்தான்.

"ஏய் நைட் தான் போனிலே மீட்டிங் முடியறதுக்கு 10 மணி ஆகுமின்னு சொன்னேன்'லே! அப்புறம் எதுக்கு கட் பண்ண பண்ண திரும்ப கால் பண்ணுறே???"

"ஐயோ அது எனக்கு தெரியுங்க! காலையிலிலே உங்க அம்மாவும், அக்காவும் போன் பண்ணினாங்க! ஒங்க சித்தப்பா பொண்ணு ரூபி'க்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குதாம், நேத்து மதியத்திலே இருந்து ஒன்னுமே அவ சாப்பிடலையாம்! உங்கக்கிட்டே சொன்னாங்களா?" இது சந்துருவின் வருங்கால மனைவி சுதா.

"நேத்து மதியம் அக்கா போன் பண்ணுறப்போ சொன்னுச்சு! நான் இந்த வாரம் சனி,ஞாயித்துக்கிழமையிலே வந்து பார்க்கிறேன் சொல்லிருந்தேனே! இப்போ எப்பிடி இருக்காளாம்?"

"அதுதான் தெரியலைங்க! நான் போய் பார்த்துட்டு மதியவாக்கிலே போன் பண்ணிச்சொல்லுறேன்! இப்போ போயி வேலையே பாருங்க"

சுதா போன் பண்ணியதில் இருந்து சந்துருவுக்கு வேலை ஒன்றுமே ஓடவில்லை. ரூபி என்று செல்லமாக அழைக்கப்படும் ரூபிணி அவன் சித்தப்பா'வின் மூன்றாவது பொண்ணு. பன்னிரண்டு வயசும், எட்டு வயசும் ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது மூணாவது பையன் கொஞ்சம் தள்ளி பிறந்தா நல்ல சுகப்போகத்தை கொடுப்பான் அந்த வாரிசு'ன்னு ஏதோ ஜோசியர் சொன்னாங்க'கிறதினாலே சித்தி கர்ப்பமா இருங்கான்னு அக்கா அவன்கிட்டே சொன்னப்போ சந்துரு'வுக்கு பத்திக் கொண்டு வந்தது.

"என்னாக்கா ஒனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க! அதுவுமில்லாமே எனக்கு கல்யாணம் வேற பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இப்போ போயி நம்ம சித்தப்பா,சித்திக்கு இன்னொரு குழந்தையா?"

"அதுனாலே என்னாடா? நம்ம எல்லார் வீட்டிலேயும் ஆம்பிளை பசங்க இருக்கீங்க! அந்த சித்தப்பா வீட்டிலே இல்லலே? நீ எதுவும் வாயை வைச்சிட்டு சும்மாயிருக்காமே என்னத்தயாவது வெடுக்கென்னு சொல்லிறாதே?" இப்பிடி அக்கா சொன்னப் பிறகு அதை பற்றி பெரிதாக அவன் ஒன்னும் எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் ஆண் பிள்ளை என எதிர்பார்த்து பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்து சித்தி ஆஸ்பத்திரியிலே கத்தி அழுதுதை அம்மாவும் மூக்கு சிந்திக்கிட்டே சொன்னப்போ ஒன்னுமே தோணவில்லை அவனுக்கு! அவள் பிறந்த மறுநாள் அப்பா போன் பண்ணி அவள் இராசி,நட்சத்திரம், பாதம் எல்லாமே தன்னோடது ஒன்னா இருக்குன்னு சொன்னப்போது தான் மிகவும் ஆச்சரியமாகவும்,பாசமும் பொங்கி வர அவளை பார்ப்பதற்கு பெங்களூரூலே இருந்து மதுரை போய் பார்த்து வந்தான். பளிச்சென்னு முகக் களையும் அழுத்தம் திருத்தமான மூக்கு முழியுமான குழந்தை அவன் மனதிலே பளிச்சென்னு ஒட்டிக்கொண்டது. அதன் பின்னர் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் இவனை பார்த்ததும் அவள் அழத் தொடங்குவதும், சித்தியும்,தங்கைகளும் "ஒன்னை ஏதோ வேத்து ஆளா நினைக்கிறா போல"ன்னு சொல்லுவதும் அடுத்தமுறை வரும் பொழுது நல்லா பழகிறலாமின்னு தனக்கு தானே சமதானப்படுத்தியதும் நினைவுக்கு வந்து போனது.

அவளின் முதல் பிறந்தநாளுக்கு டிரெஸ் வாங்கி கொண்டு போனதை சரியாக நினைவு வைத்து இரண்டாம் பிறந்தநாளுக்கும் சரியாக போன் பண்ணி கேட்டதும், நேரில் சென்று பார்க்கும் பொழுது சித்தி பின்னாடி போய் ஒழிந்து கொண்டு எட்டிப்பார்ப்பதும், தனக்கு பொண்ணு பார்க்க போகும் பொழுது நாட்டாமை படத்திலே மனோரமா பேசிய டயலாக்'யும் பேசி காட்டி எல்லாரையும் கலகலக்க வைத்ததையும், அவளின் குறும்புகளை நினைத்துக் கொண்டே அவனையறியாமலே கண்கள் கலங்குவதும், மனது எதிலேயும் நிலைப்பெறாமல் இருந்ததையும், மதிய சாப்பாட்டு நேரத்தில் அனைவரும் சாப்பிட அழைத்தும் பித்து பிடித்தவனாகவும் நொடிக்கொரு முறை அவள் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்.

செல்போனில் தம்பி நம்பர் பார்த்ததும் சற்றே பதறிய படியே கால் அட்டெண்ட் பண்ணினான் சந்துரு.

"ஹலோ! எப்பிடிடா இருக்கா இப்போ?"

"ஹிம் இப்போ பேச ஆரம்பிச்சிருச்சு! ஆனா ஒன்னுமே சாப்பிடலை! பால், ஜீஸ்'ன்னு எதோ கொஞ்சமா காலையிலே குடிச்சாளாம். இப்போதான் சித்தாப்பா'கிட்டே போன் பண்ணி வீட்டுக்கு வாங்க'ப்பா'ன்னு சொன்னாளாம். சித்தப்பா இப்போதான் எனக்கு போன் பண்ணி சொன்னார். நான் வீட்டிலே போயி பார்த்துட்டு கால் பண்ணுறேன்!"

"சரி வீட்டுக்கு போனதும் போன் பண்ணு! காலையிலே இருந்தே மனசை சரியில்லை!"

போனிலே பேசுனதுக்கப்புறம் மனதுக்கு கொஞ்சம் தெம்பாக உணர்ந்த சந்துரு தன்னுடைய மதிய சாப்பாட்டுக்கு சென்று வந்து தன்னுடைய வழக்கமான அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான். இந்த வீக் அப்டேட் மீட்டிங்கிலே நிறைய பெண்டிங் இஸ்யூஸ் இருப்பதை கண்டு, அதை ஃபிக்ஸ் பண்ணுவதிலே குறியாக இருந்தாலும், மனதோரத்தில் ரூபிணி நலம்வேண்டி பிராத்தனையிலும் ஈடுப்பட்டு கொண்டே இருந்தான். தீடீரென அடித்த செல்போன் மணியை அணைத்து காதில் வைத்தான்.

"ஹலோ!"

"..."

"ஹலோ ராஜா!"

"..."

"டேய்.. யாரு இது?"

"......"

"எதுக்குடா அழுவுறே? என்னாடா ஆச்சு?"

"சந்திரா நம்ம ரூபி நம்மளை விட்டுட்டு போயிட்டா'டா!"

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! என்னடா சொல்லுறே? இப்போதானாடா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி பேச ஆரம்பிச்சாடா'ன்னு சொன்னே? என்னாடா நடத்துச்சு?"

"ஹிம்ம்ம்ம்ம்ம்... சித்தப்பாவுக்கு மட்டும் போன் பண்ணி வரச்சொல்லைடா! நம்ம அக்கா,அம்மா,அப்பா எல்லாருக்கும் போன் பண்ணி வரச்சொல்லிருக்கா? எல்லாரையும் ஒன்னா பார்த்துட்டு நம்மளை விட்டு போயிட்டா'டா!"

"அப்போ எல்லாரையும் கூப்பிட்டு பார்த்தவா என்னை மட்டும் பார்க்கமே போயிட்டாளே? தெய்வமே அவ என்கிட்டே பேசி பார்த்தது இல்லியே? எனக்கு இப்பிடியொரு சோதனையா?"

"டேய்... அப்பா பேசனுமின்னு சொல்லுறாங்க! இரு போனை கொடுக்கிறேன்!"

"ஹலோ அப்பா என்னாச்சு? என்ன நடக்குது அங்க? பக்கத்திலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுக்கு என்னா? மதியத்திலே இருந்து என்னப்பண்ணிட்டு இருந்தீங்க??"

"அடேய் சந்திரா! எல்லாம் முடிஞ்சு போச்சு! இப்போ ஆஸ்பத்திரி வாசலிலே தான் நிற்கிறோம். நாங்க இங்கன அழக்கூட தெம்பில்லாமே இருக்கோமிடா! அந்த பச்சை குருத்து உசுரை விட்டு அஞ்சு நிமிசம் கூட ஆவலை! எதும் பேசுற நிலைமை'லே நாங்க இல்ல! இன்னும் 2 - 3 மணி நேரத்திலே அவளை கொண்டு அடக்கம் பண்ணப்போறோம்."

"என்னாது! நான் வந்திறேன்ப்பா, அதுவரைக்கும் இருங்க!"

"டேய், இப்போ ஒனக்காக எல்லாம் இப்போ காத்துக்கிடக்க முடியாது, அவ ஒடம்பு ஏற்கெனவே விறைச்சுப் போச்சு, இனிமே வைச்சிருக்க வேணாமின்னு டாக்டர் சொல்லிட்டாங்க! அக்காவும் திருச்சி சித்தப்பா'வும் வந்ததும் நாங்க போயி அடக்கம் பண்ணிட்டு வந்துருவோம். இன்னும் ஒனக்கு 40 நாளிலே கல்யாணம், அதுனாலே நீ அங்கன இங்கன'லாம் அலைய வேணாம், இப்போ நான் எதுவும் பேசுற நிலைமையிலே இல்ல!"

"அப்பா! என்னா சொல்லுறீங்க? நான் வரவேணாமா? அவ கடைசியா ஒங்க எல்லாரையும் பார்த்துருக்கா! நான் அவளை கடைசியா ஒருதரம் பார்த்துகிறேனே? கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பா! நான் இப்பவே சென்னை ஃபிளைட் பிடிச்சு வந்து அங்க இருந்து ஏதாவது மதுரை ஃபிளேட் பிடிச்சு எப்பிடியாவது நைட்குள்ளே ஊருக்கு வந்துறேன். அப்பா... பிளிஷ், எனக்காக இதை மட்டும் செய்யுங்க? இப்போ சித்தப்பா'கிட்டே போனை கொடுங்க, நான் பேசணும்..."

"நீ ஒன்னும் பண்ணவேணாம்! சித்தப்பா பேச்சே வரமாட்டாமே ஒட்கார்த்துருக்கான், அவன்கிட்டே என்னாடா பேசப்போற? பேசாமே இரு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்து பாரு.... இப்போ எதுவும் என்னாலே பேசமுடியாது."

அப்பா வெடுக்கென்னு பேசி போனை வைத்ததும் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைமையிலே இருந்தான், இம்மாதிரியான அவசர ஆத்திரத்துக்கு கூட நேரத்துக்கு போகமுடியாத தன்னுடைய வேலை , மற்றும் தனிமையை நினைத்து அழக்கூட திரணியில்லாமால் மனது கனத்துப் போனான்.

இரண்டு நாள் கழித்து ஊருக்கு சென்றப்போது நேராக சித்தப்பா வீட்டுக்கு கூட மனதில்லாமல் தன்னுடைய வீட்டுக்கே சென்றான் சந்துரு.

"டேய் சந்திரா... இங்கப்பாரு எல்லாமே முடிஞ்சுப்போச்சு! இனி அங்கப்போயி எதுவும் என்னாச்சு? எதாச்சு'னு கேள்வி கேட்காதே? ரெண்டு நாளா சித்தி அழுது அழுது மயக்கமாகவே கெடந்தா, இப்போதான் ஏதோ எழுந்து ஒட்கார்ந்துருக்கானு சொன்னாங்க! ரொம்ப முக்கியமா நீ கலங்கி அழுதுறாதடா! அந்த வீடே நாங்க அழுது சிந்துன கண்ணிரா தான் இருக்கு...! போய் பார்த்துட்டு சித்தி,சித்தப்பாவேயும் சாப்பிட சொல்லு! நீ சொல்லியாவது சாப்பிடறாங்கன்னு பார்ப்போம்"

"ஹிம் சொல்லுறேன்!"

"சந்திரா, என்னாடா எல்லாமே முடிஞ்சதுப்புறம் வந்துருக்கே, அடக்கம் சரியா பண்ணியாச்சான்னு சோதனை பண்ண வந்தியா? இல்ல நீ வாங்கிக்கொடுத்த டிரெஸ் இருக்கா இல்லையான்னு பார்க்க வந்தியா? அன்னிக்குக்கூட சந்துரு'ண்ணே வாங்கின டிரெஸ் எடு! நான் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டே ஒன்னையே பார்க்கமே போயிட்டா!" தன்னை பார்த்ததும் இப்பிடி சொல்லி அழும் சித்தப்பாவை தேற்றுவதா இல்லை "ஒன்னை பார்த்ததும் ஒளிஞ்சுக்க ஒரு ஜீவன் இல்லாமே போயிருச்சே'ன்னு ஈனஸ்வரத்திலே அனத்துக்கிற சித்தியை சமாதானப்படுத்துவதா, எப்பவும் அண்ணே! அண்ணே'ன்னு காலை சுத்திக்கொள்ளும் தங்கைகள் இருவர் இப்போழுது மெல்ல தலையை தொங்கப்போட்டுக்கிட்டு அழுவதை சமதானப்படுத்துவதா என பயங்கர குழப்பத்திலே உட்கார்த்திருந்தான். அப்பா சொன்னமாதிரியே நாமும் அழுதுவிட்டால் இங்கு இன்னமும் துக்கம் பெரிதாகி விடுமென தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். சந்துருவுக்கு அனைவரும் அழும் இடத்தில் தான் மட்டும் அழாமல் இருப்பது தான் கல்நெஞ்சனா என கூட சந்தேகம் வர ஆரம்பித்தது. தன் வீட்டுக்கு சென்று இன்னும் மற்ற விபரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம், இங்கிருக்கும் பட்சத்தில் தன்னை பார்த்து மேலும் இவர்கள் அழுவார்கள் என்ற காரணத்தில் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

"அப்பா.. இந்த சூழ்நிலையிலே எப்பிடிப்பா கல்யாணம் நடத்துறது? இன்னும் ஆறு மாசம் கழிச்சி தேதி குறிங்க!"

"இல்லே அதெல்லாம் வேணாம் சந்திரா! நேத்தே நான் போயி ஜோசியரை பார்த்து பேசியாச்சு! கல்யாணத்தை தள்ளிப்போட வேணாமின்னு சொல்லிட்டார், ,"

"என்னப்பா சொல்லுறீங்க? ஏன்? எழவு நடந்த குடும்பத்திலே இருந்து இன்னும் கொஞ்சநாளிலே கல்யாணமுன்னு சொன்னா நல்லாவா இருக்கு? எனக்கு பிடிக்கலை? கல்யாணத்தை கொஞ்சநாள் கழிச்சு வைங்க"

"அடேய்.. சொன்னதை கேளுடா! ரூபிணி செத்து மண்ணுக்குள்ளே போகலடா! நம்ம மனசுக்குள்ளே தெய்வமா நிறைச்சுட்டா! வானத்திலே இருந்து தெய்வம் வந்தா நான் உங்களோட தெய்வமின்னு சொல்லி நிருப்பிச்சிட்டு போகும்? இந்தமாதிரி குறை வாழ்வு தேவதைதான் நாங்க ஒங்க எல்லாருக்கும் தெய்வமின்னு வாழ்ந்து நிருபிச்சி காட்டிட்டு போயிருக்கு"ன்னு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் சந்துருவின் அப்பா..."

இதற்கு மேலும் அப்பாவிடம் மேலும் பேசமுடியாது என நினைத்துக்கொண்டு பெரியவர்கள் எடுத்த முடிவை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், வெகு விமரிசையாக நடத்தப்பட வேண்டிய தன்னுடைய கல்யாணம் வெகு எளிமையாக நடத்தப்பட்டது குறித்து ஆறுதல் அடைந்தான். சந்துரு திருமணத்திற்கு பிறகு சிறிதுசிறிதாக இயல்பு வாழ்க்கைக்கு அந்த குடும்பம் பழக்கப்படுத்தி கொண்டாலும் அவளது மரணம் எல்லாரிடம் எதாவதொரு சமயத்தில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. அதற்கு தக்கவாறு சந்துரு மனைவி கர்ப்பகமாக இருந்தப் பொழுது பெங்களூர் வந்து கவனித்துக் கொண்டு மாதம் வந்ததும் ஊருக்கு பத்திரமாகவும் அழைத்து போனாள் சித்தி. அவர்கள் சென்ற் இரண்டாம் மாதத்தில் ஒரு மதிய வேளையில் வலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க போகிறோம் என தகவல் வந்ததும் ஃபிளைட் பிடித்து ஊருக்கு போய் சேர்ந்தான், இன்னும் 20 - 30 நிமிசத்திலே குழந்தை பிறந்துருமின்னு நர்சம்மா சொல்லிட்டு போனதும், பிறக்கும் குழந்தை குடும்பத்தின் முதல் வாரிசு என்பதனால் முதலில் பார்க்கவேண்டுமென்று கூடியிருந்தனர். அவனுக்கான அமைதியை கிழித்துக் கொண்டு புகுந்தது புதிய சத்தமென்று, வெள்ளைத்துணியில் மலர்ந்த மொட்டென்று அலங்காரம் என்பதை இல்லாமல் தேவதையாக சிரித்து கொண்டுருந்தது.

"அம்மா! அப்பிடியே சுதா ஜாடை'ம்மா" இது அக்கா

"இல்ல சந்துரு ஜாடைதான்! இங்கப்பாரு இடதுகன்னத்திலே அவனுக்கு இருக்கிறமாதிரி மச்சமிருக்கு" இது சித்தி

"மூக்கு பெரிசா இருக்கிறத பார்த்தா அவ அப்பத்தா மாதிரி இருக்கா!" இது அப்பா

"இப்பவே எல்லாரையும் மொறைச்சு,வீராப்பா பார்க்கிறா? அப்போ இது உங்க ஜாடைமாதிரி தானே இருக்கா?" இது அம்மா

"இல்ல! இல்ல! இது நம்மகிட்டே வாழ்ந்த மாணிக்கமலரின் மறு பிறப்பு"ன்னு சொல்லி முதன்முதலாக ரூபிணி'க்காக அழுதான் சந்துரு.

Monday, July 9, 2007

போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்.....

நம்ம அருமை பெருமையெல்லாம் அடுக்கோ அடுக்கி பதிவா போட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் சொல்லுடா'ன்னு கூப்பிட்ட இத்தனை பேரையும் மதிச்சு பதிவை போடமுடியாமே ஆபிஸிலே வேலையை தவிர வேற எதையும் பண்ணக்கூடாதுன்னு எல்லாத்திலேயும் ஃபீயூஸ் பிடுங்கிட்டானுக! அவனுக கிட்டே சண்டை போட திராணியில்லாமே இப்பிடிதான் தலைப்பு வைச்சிக்க முடியுது... :(

1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கவிதாயினி
6) கொல்லிமலை ஜே.கே




என்னையும் மதிச்சு கூப்பிட்ட அவங்க பாசத்தை நினைச்சி ஆனந்த கண்ணிரு பெருக்கெடுத்து ஓடுதுங்க.அந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திட்டு வந்தா நம்ம ஆனைக்குட்டி லேப்டாப்'லே ஒட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிது, அதை ஓரமா ஒரு இடத்திலே பார்க் பண்ணிட்டு நம்மோட ஒலக சாதனைகளை ஒவ்வொன்னா எடுத்து விடுறேன். கல்லை விட்டு அடிக்கிறதா இருந்தா ஒவ்வொருத்தரா அடிக்கனும், இப்பிடியெல்லாம் மொத்தமா எல்லாம் சேர்ந்துக்கிட்டு அடிக்கப்பிடாது. டேமேஜ் ரொம்ப பலமா ஆகுதுலே.... :)

1) எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது. பெங்களூரூலே தம்பி வேலைப் பார்க்குதே கொஞ்சம் நல்லாலாம் டிரெஸ் போட சொல்லக்கூடாதா'ன்னு எங்க தெருக்காரங்க அம்மா'க்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. ஹிம் அதுக்கு அவங்க ரிக்கார்டட் டயலாக் " பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"

2) படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...

3) எங்கப்போனாலும் நாமே பேசுற பேச்சு, அப்புறம் பண்ணுற நொணநாட்டியத்தை வைச்சே இது மருதயிலே இருந்து கிளம்புனது'னு ஈஸியா எல்லாரும் கண்டுப்பிடிச்சிருவாய்ங்கே.

4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.

5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.

6) டெக்னாக்லாஜிலே எக்ஸ்பர்ட் ஆகுறேன் பேர்வழின்னு என்னத்தயாவது போட்டு நொண்டோ நொண்டி அதை ஒன்னுமில்லாமே ஆக்கி ஒப்பேத்துறது பெரிய சாதனை மக்கா... எங்கப்பாரு அடிஅடின்னு அடிச்சும் இன்னவரைக்கும் அது குறைஞ்சப் பாடு இல்ல...

7) எத்தனதடவை தான் சொல்லுறதுன்னே தெரியலை.. இப்பவும் சொல்லிக்கிறேன், பொஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்ச அதை கீழே வைக்கிறதே இல்ல. சின்னவயசிலே அம்புலிமாமா படிக்கிறோப்போ எங்கப்பார் சொல்லுவாரு.. "இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"

8) இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.

Thursday, June 28, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு

வணக்கம் நண்பர்களே,


சமீப காலங்களாக வலைபதிவர் சந்திப்பு பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று கொண்டு இருப்பது வரவேற்கதக்கதே.

அந்த வகையில் பெங்களூரூலும் வலைபதிவர் சந்திப்பை வரும் ஜீலை மாதம் 14ம் தேதி சனிக்கிழமை லால்பார்க்'லில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் சற்றே
மாறுப்பட்ட முறையில் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாகவும் போட்டோகிராபி பற்றிய சிறிய அறிமுகங்களுடன் நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்று தினம் காலையில் சந்திப்பு'க்கு பிறகு பெங்களூரூலில் இருக்கும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று நம்மால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாய்ப்புக்கள் சரியாக அமையும் பட்சத்தில் அவ்வில்லத்திலே நமது
மதிய உணவு வேளையை அவர்களுடன் சேர்த்து கழிக்கலாம். இதற்கு உங்களின் மேலான கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகள உங்களுக்கு தெரிந்த இல்லத்தை பற்றிய விபரங்கள் இருந்தாலும் அளிக்கலாம்.

மேலும் புகைப்பட கலை பற்றிய சிறிய அறிமுகத்தை நண்பர் நச்.செல்லா, மற்றும் வெண்பா வாத்தி ஜீவ்ஸ் அளிக்க உள்ளனர்.





இடம்:- பெங்களூரூ லால்பார்க் நாள்:- 14 - 07 -2007 நேரம்:- காலை 10.00

உங்களின் வருகையை உறுதி செய்ய பின்னூட்டத்தில் தகவல்களை அளியுங்கள்.

மேலும் தகவல் தொடர்புகளுக்கு

Monday, June 18, 2007

எனக்கான வெளியில்.......



சுயமறிதலின் போரட்டங்களில்
பறக்குமெனது ஆத்மா!

மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்
வான்வெளியில் கலவாத
போரட்ட பாங்கொடு ஓப்பிட தொடங்கியதன் பயணம்
உச்சமென்னும் நிலைக்கு அடிபணியும்
நிலவிடமும்,உச்சமென்னும் நிலையொன்றை ஆளும்
ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று
நிலையற்ற தன்னிலை அறிந்து திரும்பியதும்
இன்னுமொரு இரவிலும் தன் பயணத்தை தொடர
அதனின் திட்டங்களை வரையறுத்து கொண்டது.

அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.

Wednesday, May 30, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

கடைசியாக இம்சை அரசியின் ஞாபக மீட்டல்கள்:-

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து காவேரிக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் பேசி சென்றவன் எதற்காக இப்பிடி என்னை பற்றி எல்லா விபரங்களையும் சேகரிக்கனும், தான் தெரிஞ்சுக்கிட்டதை ஏன் சந்தர்ப்பம் எதிர்பார்த்து என்கிட்டே வந்து சொல்லனும், சே இந்த ஆம்பிளக எல்லாருமே இப்பிடிதான் இருக்காங்கன்னு மனதில் நினைத்துக் கொண்டாள். அச்சமயம் அவ்வழியே வந்த வசந்த் அவளிடம் வலிய வந்து பேச்சு கொடுக்கிறான்.

"ஹாய் காவேரி? என்ன பலத்த யோசனை?"

"ஹாய் வசந்த்! அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன், தட்ஸ் ஆல்"

"ஹிம் ஐ நோ! ஒன்னோட பெர்சனல் டீடெய்ல்ஸ் எதுக்கு நான் கலெக்ட் பண்ணேன்னு டவுட் இருக்கு? சரியா?"

"ஆமாம்! ஒங்களுக்கு...ம் ம் ஒனக்கு எதுக்கு இந்த வேலை?"

"அட நானா கேட்கலை தாயே! ஒன்னோட ஃப்ரண்ட் உமா'கிட்டே பேசிட்டு இருந்தேன், அவ சரியான ஓட்டை வாய் போலே! நான் ஒன்னு கேட்டா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டா! அதுவுமில்லாமே சொல்லி முடிச்சிட்டு ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட்'ன்னு சொல்லுறா! நல்ல ஃபிரண்டா தான் பிடிச்சி வைச்சிருக்கே!"

"ஓ எல்லாம் அந்த ஓட்டைவாயி வேலைதானா? தென் ஓகே! அன்னிக்கு சடனா எல்லா டீடெல்ஸ் சொன்னதும் எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சு,"

"ஹிம் என்ன டவுட்?"

"ம்ம் சொல்லுறேன்! ஓகே வசந்த், கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, அப்புறமா மீட் பண்ணலாம்"

இச்சந்திப்புக்கு பின்னர் தினமும் வகுப்பு முடிந்ததும் இருவரும் மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பேசி கொள்வதை பழக்கமாக்கி கொண்டனர்.கல்லூரி வளாகத்திலும், காவேரி தங்கியிருக்கும் ஹாஸ்டலிலும் காவேரி மற்றும் வசந்த்'யும் இணைந்து பேசுவதுதான் ஹாட் டாபிக்'ஆக இருந்தது, அதை நினைத்து காவேரியோ, வசந்தோ சட்டை செய்யாமல் இருந்தது தான் எல்லாருக்கும் மிக்க ஆச்சரியமாகவும், இன்னமும் பேசுவதற்கு தூண்டுக்கோலாகவும் இருந்தது, வசந்த் சில சமயங்களில் தன்னை பற்றி வரும் வார்த்தைகளுக்கு அமைதியாக சென்றாலும் காவேரி பற்றி வரும் சில கமெண்ட்களுக்கு மிகவும் கோபப்பட்டு சில சமயம் சண்டைக்கும் போகலானான்.

"என்னடி காவேரி? ஒன்கிட்டே நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கே?" இப்பிடியொரு குதர்க்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள் உமா,

"நீ என்ன கேட்கவாறேன்னு எனக்கு கொஞ்சம் விளங்குது? அந்த வசந்த் நம்மோட கிளாஸ் கூட கிடையாது? ஏன் அவன்கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்னு கேட்குறதுக்காக மாற்றமின்னு ஓரே வார்த்தையிலே கேட்டு பார்க்கிறே? அப்பிடிதானே?"

"வாவ்...கிரேட்'டீ! நான் என்ன கேட்கனுமின்னு நினைச்சனோ அதை நீயே சொல்லிட்டே? மரியாதையா சொல்லிரு?"

"Nothing Special உமா! Moreover நீ இப்பிடி பேசுறதும்,குதர்க்கமா கேள்வி கேட்கிறதையும் பார்க்கிறப்போ ரொம்ப வித்தியாசமா நான் ஃபீல் பண்ணுறேன்!"

"காவேரி! யூ மிஸ்டேக்கன் மீ! நார்மலா எல்லாருக்கும் வர்ற சந்தேகந்தான் எனக்கும் வந்துச்சு, ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட், ஸோ நான் கேட்டுட்டேன்!"

"ஹிம்! எங்களுக்குள்ளே அதெல்லாம் இல்லை! அப்பிடியே நடந்தாலும் நான் ஃபர்ஸ்ட் ஒனக்குதான் சொல்லுவேன்! ஓகே?"

உமா நேரடியாகவே வசந்த்'க்கும் தனக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்டதும் சற்று கோபப்பட்டாலும், அவன் மீது இவளுக்கு காதல் ஏதுவும் வந்துவிட்டதா என கூட கொஞ்சமே குழம்பிதான் போனாள். சரி இதை பற்றி அவனிடமே மறுமுறை சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம், என முடிவு செய்து கொள்கிறாள்.

"வசந்த்! நான் இப்போ கொஞ்சம் கன்பீயூசன் ஸ்டேஜ்'லே இருக்கேன்'ப்பா! உமா என்கிட்டே வந்து நீ வசந்த் லவ் பண்ணுறீயான்னு கேட்கிறா? வாட் த ராங் வித் அஸ், நாமே நார்மலா தான் இருக்கோம், ஏன் அவங்களுக்கு அப்பிடியொரு டவுட் வருது? டூ யூ ஹாவ் எனி ஐடியா?"

"காவேரி, இந்த லைப் அதாவது காலேஜ் கேம்ப்ஸ்'க்குள்ளே ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அது லவ் தான்னு கன்பார்ம் பண்ணுவாங்க... Free'யா விடு, எதுக்கும் டென்சன் ஆவாதே? By the way நானே இதை பத்தி பேசலாமின்னு இருந்தேன்! நீயே பேசிட்டே!"

"ச்சே! என்ன உலகம்'டா சாமி! வசந்த் நீயே சொல்லிருக்கே! நீ வீட்டுக்கு ஓரே பையன், அதுனாலே எந்த உறவுமுறை பாசமும் இல்லை, அதுவுமில்லாமே ரொம்பதூரத்திலே இருந்து வந்து இங்க நீ தங்கி படிக்கிற! அதேமாதிரி நிலைமைதான் எனக்கும், எனக்கு அம்மா கிடையாது, தம்பி,தங்கை,அண்ணன்,அக்கா'ன்னு எந்த பந்தபாசமும் கிடையாது, இப்போ இவங்கல்லாம் பேசுறதே பார்க்கிறோப்போ எனக்கு ஒரு ஃபிரண்ட்'ம் இல்லாமே போயிரும் போல இருக்கு!"

"அட ரொம்பதான் ஃபீல்'ஐ போடுறே? ஃFree'யா விடு! Be normal....காதல் வந்ததுக்கு காரணகாரியங்கள் சொல்லாலாம், ஆனா நமக்குள்ளே இருக்கிற நட்பை பத்தி எடுத்து சொல்லுறதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அவங்க என்ன சொன்னாலும் விட்டு தள்ளிட்டு போயிட்டே இரு, ஒருத்தருக்கு நீ பதில் சொல்ல ஆரம்பிச்சேனா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கனும். நம்ம மேலே தப்பான அபிப்ரயாத்தை வளர்ந்தவங்க அவங்கதான், நாமே இல்லை, அவங்களா அதை மாத்திக்குவாங்க...."

"ஹிம் நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு வசந்த, ஆனா சிலசமயங்களிலே நான் செய்யுறது எனக்கே சரியா தப்பான்னு குழப்பம் வரும். அந்தமாதிரி சமயங்களிலே முடிவெடுக்க முடியாமே திணறப்போ நீ எனக்கு ஆதரவு கொடுக்கிறே? அழனுமின்னு தோணுனாலும் தோள் கொடுக்கிறே? சிரிக்கனுமின்னா கூட சேர்ந்து சிரிக்கிறே? நீ கிரேட்'டா!"

"ஓ இதை வைச்சிதான் இந்த கவிதை எழுதினேயா? , அதை சிலசமயம் விடாமே படிச்சிட்டே இருப்பேன்!"

"அப்பிடியா? எந்த கவிதை?"

"ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு."

"ஹி ஹி அது நான் எழுதலை! ஒரு இடத்திலே சுட்டது...!"

"அடபாவி, ஒன்னை போய் பெரிய கவிதாயினி'ன்னு நினைச்சேன்னே? அப்போ இதை எழுதினதும் நீயில்லையா?

தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

"இது எழுதினது நாந்தான்"

"ஹிம் இந்தமாதிரி நட்பை மையமா வைச்சு எழுதுனா கவிதைகளை வைச்சு தான் ஒன்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கனுமின்னு தோணுச்சு காவேரி"

"ஹிம் ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கிறதுக்கு ரீசன் சொல்லுறே? நல்லாயிரு! சரி இப்போ நான் கிளம்புறேன்!"

இப்பொழுது கொஞ்சம் தெளிவான சிந்தனையோடு தன்னுடைய அறைக்கு காவேரி செல்கிறாள். அங்கே தன் அப்பா போன் பண்ணினதாகவும் வந்தால் பேச சொன்னதாகவும் உமா சொல்லியதால் போன்பூத்'க்கு செல்கிறாள் காவேரி.

"ஹலோ அப்பா நல்லாயிருக்கீங்களா?"

"ஹிம் நான் நல்லாயிருக்கேன்.. யாரு கூட காவேரி பேசிட்டு இருந்தே? உமா என்னோமோ சொல்லுறா? எனக்கு எதுவும் பிடிபடலை?"

"ஹய்யோ! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா! அவ ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிருப்பா? நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க?"

"சரிம்மா! ஒடம்பை நல்லா பார்த்துக்கோ! நல்லா படி! போனை வைச்சிறேன்"

எப்பவும் தன்னிடம் நன்றாக பேசும், இன்று சரியாக பேசாத காரணத்தை தெளிவாக ஊகித்தாள் காவேரி. தான் இல்லாத நேரத்தில் வந்த போனில் தேவையில்லாத விஷயங்களை பேசி அப்பாவிடம் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பது உமா வேலைதான்.

"உமா! அப்பாகிட்டே என்ன சொன்ன?"

"நான் ஒன்னுமே சொல்லலையே? ஏன் போன் பண்ணிட்டு வந்ததும் இப்பிடியொரு கேள்வி கேட்கிறே?"

"சந்தேகமா யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தேன்னு எங்கப்பா கேட்டாரு? எப்பவும் அந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார் தெரியுமா? நான் எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிட்டேன், இன்னும் நீதான் புரிஞ்சுக்காமே வசந்த்யும் என்னையும் தப்பா நினைச்சிட்டு இருக்கே?"

"காவேரி! திரும்ப திரும்ப ஒரேமாதிரி சொல்லி போரடிக்காதே! ப்ளிஷ் டெல் மீ எஸ் ஆர் நோ?"

"கட்டாயமா அதுக்கு என்னாலே தெளிவா பதில் சொல்லமுடியும்... நோ..நோ..."

"அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் காலநேரம் இல்லாமே பேசிட்டே இருக்கீங்க...? எனக்கு தெரிஞ்சு கிளாஸ் ஹவர்ஸ் போக, ஒன்னை இங்க ஹாஸ்டலிலே பார்த்ததே கிடையாது, எல்லாநேரமும் அவனோட தான் அந்த மரத்தடி கிழே பேசிட்டு இருக்கீங்க! அந்த மரத்தடிக்கு கூட இப்போ பசங்க வசந்தகாவேரி மரமின்னு பேர் வைச்சிட்டாங்க தெரியுமா?"

"உமா! உமா!! எத்தனை தடவைதான் நான் சொல்லுறது, நமக்கு தானா அமையுற உறவுமுறைகளான அம்மா தவிர்த்து எதாவது ஆதாயம் இருக்குமின்னு எதிர்ப்பார்ப்பு'லே தான் இருப்போம். அண்ணா'ன்னா நம்மை படிக்க வைப்பான், நாமே படிச்சு முடிஞ்சதும் வேலை வாங்கி கொடுப்பான், நல்ல வாழ்க்கையை அமைஞ்சு தருவான்'ன்னு நம்மளையறியமாலே எதிர்பார்க்கிறோம், அது அவங்ளோட கடமைன்னு நாமே அதை சொல்லி தப்பிச்சுக்கலாம், இந்தமாதிரி நிறையவே நம்ம உறவுமுறைகளுக்கு எடுத்துக்காட்டு கொடுத்துட்டே போகலாம். ஆனா நட்புன்னு வர்றோப்போ தான் அதுக்கு எதையும் எதிர்பார்த்து ஏற்படுத்திக்க முடியாது. வசந்த் கூட வந்த நட்பு சாதாரணமா தான் இருந்துச்சு, ஆனா சில சம்பவங்களிலே அது இன்னமும் ஸ்டராங்'கா ஆகிருச்சு,"

"என்னோமோ காவேரி! சினிமா டயலாக் மாதிரியெல்லாம் பேசுறே? அப்பிடி என்னா ஒங்க ஃபிரண்ட்ஷிப்'லே ஸ்ட்ராங்'க்கின இன்ஸிண்ட் நடந்துச்சு?"

"ஹிம்! என்ன பேசுனாலும் அதை கிண்டல் பண்ணுறதே ஒன்னோட வேலையா போச்சு, ஒரு நாள் நம்ம காலேஜ் கிரவுண்ட்'லே சைக்கிளிலே ரவுண்ட் அடிச்சிட்டு இருந்தேன், அப்போ என்னயறியாமலே என்னோட துப்பட்டா சைக்கிள் சக்கரத்திலே சிக்கி அய்யோ அதே சொல்லவே முடியலை, துப்பட்டாவே சுடி'யோட பின் பண்ணிருந்ததுனாலே அதுவும் சேர்ந்து இழுந்து கிழிச்சு போச்சு,என்னோட நிலைமையே அப்போ நினைச்சு பாரு, எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருப்பேன் அங்க இருந்த பசங்க முன்னாடி, அங்க விளையாடிட்டு இருந்த வசந்த்'தான் தன்னோட ஷர்ட்'ஐ கொடுத்து ஹெல்ப் பண்ணினான், அப்போ சில ஆம்பிளக'கிட்டே இருக்கிற அந்த விகல்ப புத்தி அவன்கிட்டே சுத்தமா இல்லை. இன்னமும் நிறைய இருக்கு, அவனை நீங்கல்லாம் சொன்னமாதிரியெல்லாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியலை, எங்கக்கிட்டே ரெண்டு பேர் நடுவே இருக்கிறது சுத்தநட்பு... அவ்வளோதான்,"

"காவேரி! என்னாடி ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரி கேர்ள் மாதிரி பிஹெவ் பண்ணுறே"

"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த அத்தியாயத்தை உளி கொண்டு செதுக்க அண்ணன் செதுக்கல் மன்னன் தேவ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்....... ;-)

பி.கு:- கதை'க்கு தேவைப்பட்ட கவிதைகளை G3 செய்ய அனுமதி வழங்கிய கவிதாயினி காயத்ரி அக்கா வாழ்க! வாழ்க!!

Thursday, May 17, 2007

கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை

விடிஞ்சாலும் விடிஞ்சுடும் போலே இருக்கேன்னு சொல்ல ஆரம்பிக்கிற நேரமது, ஒழவு மாட்டை கையிலே பிடிச்சிட்டு தோளிலே கலப்பை போட்டுக்கிட்டு சம்சாரிக நடக்கிறப்போ நாமே இனிமே கூட்டிலே இருக்கக்கூடாதுன்னு எல்லா பறவைகளுக்கும் தெரிஞ்சு போச்சு. குட்டிபறவைகள் தன்னோட தாய் பறவை கொண்டு வரப்போற இரைக்கு காத்துட்டு இருக்குற நேரத்துக்கு முன்னாடியே கத்த ஆரம்பிச்சிருச்சக, அதுக கத்துன கத்துலே மரமும் மெல்ல அசைஞ்சு கொடுத்து ஒங்களை நானு தாங்கிட்டு இருக்கேன்னு தன்னோட இருப்பை சொல்லுக்கிட்டுச்சு, மரத்துக்கு கிழே இருக்கிற பொதர்'ல ஒடகார்ந்து கிடந்த காதல் பறவக ரெண்டுகளுக்கும் தெரிஞ்சு போச்சு கொஞ்சநேரத்துக்கு பிரியப்போறமின்னு அதுகளும் பேச முடிக்கப்போகுதுக.

"ஏண்டி! சும்மா நொண நொண'ன்னு பேசிட்டே இருந்தா! இன்னும் 4 மணிநேரத்திலே காலேஜ் ஆரம்பிச்சிரும்! இப்போ போயி பஸ்ஸை பிடிச்சா தான் நான் போயி சேருவேன்! பேசிமுடி! நானு கிளம்பனும்!"

"ஆத்தி! ரொம்பத்தான் கொணட்டுற! ஏம்மாமன் சீமையிலே போய் படிக்கப்போறன்னா வந்து ஒட்கார்ந்து கிடக்கோம்! இங்கயிருந்து போயி இன்னோரு பொட்டக்காட்டுலே இருக்கிற காலேஜ்'க்கு போவப்போற? அதுக்கு எதுக்கு இம்புட்டு அலட்டலு?"ன்னு தன்னுடைய அத்தைமகன் சரவணனிடம் மகாலெட்சுமி என்ற வாயாடி சொல்லிமுடிந்தாள். சரவணன் திண்டுக்கல் அருகே இருக்கிற பொறியல் கல்லூரி மாணவன், இவளும் அவனும் சில வருடங்களாக ஒருவர்கொருவர் காதலிக்கின்றனர், மகாலெட்சுமி் அப்பாவின் உடன்பிறந்த தங்கை மகன்தான் சரவணன், அதுவுமில்லாமால் சரவணனின் சொந்த அக்காவை தான் மகாலெட்சுமி அண்ணனுக்கு கல்யாணம் செய்திருந்தார்கள்.

"அடியே எருமை மடியிலே இருந்து எந்திரி மொதல்ல! நான் கிளம்புறேன், வெள்ளிக்கிழமை ராவுலே பார்க்கலாம்!"

"என்னா மாமா! கிளம்புறீயா? சரி நீ வர்றவரைக்கும் ஈரம் காயாத அளவுக்கு ஒன்னை கொடுத்துட்டு போ?"

"அடியேய்! எந்திருடி! யாரோ வர்றமாதிரி இருக்குடி?"

"ஹிம் யாரு வர்றப்போற இங்க? இந்த நேரத்திலே? எல்லாமே ஒன்னோட ஒடப்பொறப்பு என்னோட நாந்துனா சிறுக்கிதான்"

"ஏலே! எவடி அது என்னோட தம்பியை கக்கத்துலே போட்டு கசக்கி பிழிச்சிட்டு கெடக்குறது?"ன்னு கோபம் கொண்டவளாய் அங்கே வந்தாள் சரவணன் அக்கா சாந்தி.

"ஆமாம்.. ஒன்னோட தம்பி பஞ்சாரத்திலே சிக்காத சேவலு! நாங்க கக்கத்திலே பிடிச்சு எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிறோம்! ஏன் மதினி அது மட்டும் ஒனக்கு கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி சரியா எங்களை தேடி வந்துறே?"

"நாயத்துக்கிழமை ராப்பொழுது பூராவும் தூக்கமா மணி 4ஆனதும் ஓடி வறேலே! அதுமாதிரிதான் நானும் நீ வந்த ஒருமணி நேரம் கழிச்சி வந்துருவேன்!"

"யக்கா! நல்லவேளை நீ வந்து இந்த ராட்சசி'கிட்டேயிருந்து காப்பத்துனே? நான் கிளம்புறேன், இப்போ போனாந்தான் மருத போயி சேர்த்து அங்கயிருந்து காலேஜ் பஸ்ஸை பிடிச்சி சரியா காலேஜ்'க்கு போகமுடியும்! வெள்ளிக்கிழமை சாயுங்காலம் வந்துறேன்!"

"ஏய் இந்தா! நான் கேட்டதை கொடுக்கமே போறீயே? எல்லாமே ஒன்ன சொல்லனும்! எங்கண்ணனை போட்டு பாடப்படுத்துறேன்னு பத்தாமே என்னையும் உசுரே வாங்குற? போய் இப்போ நல்லா தூங்கு?"

"தம்பி நீ கெளம்புடா! இந்த பொசக்கெட்டவளா நான் இழுந்துட்டுப் போறேன்! ஏண்டி யாருடி உசுர வாங்குறா? ஒங்க நொண்ணன் தான் நோண்டுறதுதான் பெருசா இருக்கு? இதிலே நீ வேற?"

"ஏய் இங்கப்பாரு! ஒன்னோட தொம்பி படிச்சி முடிஞ்சதும் நாங்க அவனுக்கு படிச்சப்பிள்ளய தான் கட்டிக்கொடுப்போமின்னு எங்காது படவே பேசிட்டு திரியுற? எனக்கு அது பிடிக்கலை! அவ்ளோதான் சொல்லிட்டேன்!"

"ஆத்தி! மாரியாத்தா! என்ன பண்ணிறிருவே? எங்கப்பன் என்ன சொல்லுதோ? அதத்தான் எந்தம்பி செய்வான்!"

"ம்ம் என்னபண்ணுவேனா? அந்த கெழவனை சோத்துலே உப்புஒறைப்பு போடாமே சோத்தை போட்டுந்தான் கொல்லணும்! விஷம் வைச்சாவா நீங்கல்லாம் சாகப்போறீங்க?"

"சிறுக்கி! எங்கவீட்டுக்கே வரலை? அதுக்குள்ளே எங்கப்பனுக்கு ஒழுங்கா கஞ்சி ஊத்தமாட்டேன்னு சொல்லுறீயே? எந்தம்பிக்கு நல்லபொண்ணாந்தாண்டி பார்க்கணும்"

"பார்ப்பே! பார்ப்பே! அதுக்கப்புறம் ஒன்னோட மொகத்தை சுடுப்பாறையிலே வைச்சி தேய்க்கமே விடமாட்டேன் நானு"

"அடியேய்! வீடு வந்தாச்சு! போய் செவன்னேன்னு மேவேலையே பாரு!"

"ம்ஹீக்கும் இவளுக மட்டும் அத்தை மகனை தொரத்தி தொரத்தி லவ் பண்ணுவாங்களாம் அவியங்களே கலியாணமும் பண்ணிக்குவாங்களாம்! நாங்க பண்ணா மட்டும் வந்துறாளுக எடஞ்சலை கொடுக்கிறதுக்கு"

மகாலெட்சுமிக்கு அந்த நாளும் அதற்க்கப்புறம் வரும் நாலு தினங்களும் வெறுமையாக கழிந்தது, அவளுக்கு இருக்கும் சந்தோஷமான தினங்களான சனி ஞாயித்துக்கிழமைகள் தான். சரவணனுக்கு காலேஜில் ஸ்பெசல் கிளாஸோ, இல்லை வேறு எதாவது வேலை இருந்தால் ஊருக்கு வரமாட்டான், அத்தினங்களில் இவள் சாப்பிடவே மாட்டாள்.வெள்ளிக்கிழமை ராத்திரி பத்துமணிக்கே சரவணன் வந்தாலும் அவனை பார்த்துட்டு வந்துட்டு தான் அன்னிக்கு ராத்திரியே தூங்குவாள். அந்தா இந்தா'வென்று வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. ஆனால் அவளுக்கு முன்னாடியே சரவணனை பார்க்க கிளம்பிவிட்டாள் அவள் மதினி சாந்தி.

"ஏண்டா தம்பி! இன்னும் படிப்பு முடிய ஏழெட்டு மாசந்தானே இருக்கு? ஒன்னோட தோஸ்த் ஏதோ படிப்புக்காக என்னோமோ பொரஜக்ட் அது ராக்கெட் பண்ணப்போறன்னு ஏதோ சென்னை,பாம்பே போறேன்னு சொன்னான்? நீ எங்கயும் போவலியா?"

"யக்கா அது பேரு பொரஜக்ட் இல்ல! பிரஜெக்ட்! நான் இங்கேனதான் மருதயிலே பண்ணப்போறேன்! இன்னும் ஆறுமாசந்தான் அதுக்கப்புறம் சுத்தமா படிப்பு முடிஞ்சிரும்! வேலையும் கிடைச்சிருமின்னு நினைக்கிறேன்."

"அப்போ நீ எந்த வெளியூருக்கும் போவலியா? இந்த பக்கிசிறுக்கியே பார்க்கதானே இங்கேயே அந்த பொரஜக்டை பண்ணுறேன்னு சொல்லுறே?"

"ஐயோ சும்மா இரு! அப்பன் காதிலே ஏதுவும் விழுந்து தொலைஞ்சிர போவுது! அதுப்பாட்டுக்கு உடுக்கை அடிக்காமலே சாமியாடும்"

"ஏய் என்னாடா? படிக்கிற இடத்துலே எல்லாப்பயலுவெல்லும் வெளியூர் போறாங்கன்னா நீ போகாத காரணம் அதுதானா? ஏதாவது படிக்கிறதுலே கோளாறு வந்துச்சுன்னு வை அப்புறமா ரவை ரவையா உரிச்சு உப்புக்கண்டம் போட்டு ஊருக்கே விருந்து வைச்சுருவேன் ஆமாம்"ன்னு தன்னுடைய வழக்கமான பாணியிலே திட்டி முடித்தார் சரவணன் அப்பா சுப்பையா.

"அதெல்லாம் இல்லப்பே! மருதக்குள்ளே எங்களுக்கு அதெல்லாம் கிடைக்கிது! இனிமே வெளியூரெல்லாம் போவவேண்டியதில்லை! யக்கா கிளம்பு நீயி! நானும்கூட வர்றேன் ஒன்னோட வீட்டுக்கு"

சாந்தி வீட்டை நோக்கி செல்லும் ஒத்தயடி பாதையில இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

"யக்கா நான் ஒன்னை கேட்கணும். உண்மையா பதிலை சொல்லுவியா?"

"கேளுடா? பதில் சொல்லுறேன்!"

"ஒனக்கு மகா'வே பிடிக்கலையா? எதுக்கு அவக்கூட ஓயாமே வைஞ்சிட்டே இருக்கே? அதுவுமில்லாமே எனக்கு வேற பொண்ணுதான் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வேற இருக்கே?"

"அதெல்லாம் பொய்க்குதான்! நீயும் அவளும் பழகுறதுலேயோ கல்யாணம் பண்ணிக்கிறதிலேயோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடா? நீங்க ரெண்டு பேரும் வரைமுறையில்லாமே காடுக்கரை, கமலக்காலு நெழலு'ன்னு ஒதுங்கி கெடந்தா அப்புறம் என்ன எங்களுக்கெல்லாம் மருவாதை இருக்கு? அதுதான் அடிக்கடி வந்து கண்டிக்கிறேன். அதுவில்லாமே அவ ஒரு விஷக்காரி அவளையெல்லாம் அப்பிடி வளர்ந்து கொண்டுவந்தாதான் என்னோட தம்பிக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்."

"ம்ஹீம் ரெண்டு பேரும் ஒரேமாதிரி தான் பதில் சொல்லுறீங்க. அவ ஒன்னோட சடமுடியை பிடிச்சு தினமும் ஆட்டுனாதான் சாப்பிடுவேன்னு சொல்லுறா?"

"அப்பிடியெல்லாம் சொல்லுறாளா? தம்பி படிக்கிற காலத்திலே சரியா படிச்சி முடிஞ்சுறா? எதையாவது மனசை போட்டு கொழப்பிட்டு கோட்டை விட்டுறாதே? அப்பனுக்கு வெவசாயமும் அழிச்சி போச்சு! ஒன்னை படிக்க வைக்கிறேன்னு கெணறு கெடந்த தோட்டத்தையும் வித்து புடுச்சு, என்னத்தையே இருக்கிறத வைச்சி இப்போ ஜீவனை ஓட்டிக்கிட்டு இருக்கு நம்ம குடும்பம்! நீ தலையெடுத்துதான் இனிமே நாமெல்லாம் தழைக்கனும், ஒன்னை இந்தளவுக்கு படிக்க வைக்க நம்ம அப்பன் ரொம்ப சிரமப்படுதுடா! நீ சீக்கிரமே சம்பாரிச்சு அதை இன்னும் கொஞ்சநாளிலே சும்மா இருக்கவிடுடா"

"யக்கா! அதல்லாம் கவலையே படாதே! நீ சொன்னமாதிரி இன்னும் ஏழெட்டு மாசந்தான் படிப்பு முடிஞ்சிரும் , அதுக்குள்ளே கெம்பஸ் செலக்சனிலே வேலை கிடைச்சிருமின்னு நம்புறேன்! அதுக்கப்புறம் பிரச்சினையே இல்லை! என்ன வேலைன்னு கிடைச்சா வெளியூரிலே தான் வேலை கிடைக்கும் அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!"

"ஆக ஒனக்கு அவளை பார்க்கமே இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்! எங்களை பார்க்காதது எல்லாம் அப்பிடி இருக்காதா?"

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? எல்லார்த்தையும் பார்க்கமே இருக்கிறதும் கஷ்டந்தான். நம்ம அப்பன் முன்னமாதிரியெல்லாம் ஏன் என்னை வையிறதே இல்ல?"

"அதுக்கு என்ன தெரியப்போகுது! நீ படிக்கிறே என்ன மார்க் வாங்குறேன்னு? இனி இங்கன வந்தா இவ பின்னாடியே திரியறேன்னு சொல்லாமே சொல்லி திட்டும்? இப்போதான் நீயி படிச்சி முடிக்கப்போறே? அதுமில்லாமே சீக்கிரமே வேலையும் கெடைச்சிருமின்னு தெரியவந்ததும் இப்போல்லாம் செவனேனு சந்தோஷமா இருக்கு"

"யக்கோவ்! ராட்சாசி வர்றா! ஒன்னோட தலைமுடியை தயாரா வைச்சிக்கோ! பிடிச்சி ஆட்டத்தான் இம்புட்டு வேகமா வர்றா?"

"அடியேய் சிறுக்கி! பத்துமணிக்கு என்னாடி ஒனக்கு இங்கேன வேலை?"

"ஆங் என்னோட பிருத்துவிராசரு குருதயிலே வர்றாரு, அவரை எதிர்கொண்டு மணமாலை வாங்கப்போறேன்! எனக்கு முன்னாடியே ஒன்னோட தொம்பிய பார்க்க போயிட்டியா'க்கும்?"

"யாத்தி மாரியாத்தா! ஒன்க்கிட்டே பேசணுமின்னு தாண்டி அவனே இங்கன வாறான்! அவன்கிட்டே என்னான்னு கேளு! நானு இங்கெனந்தான் நிக்கிறேன்"

"அடிய்யே மகா! நான் சொல்லுறதை கேட்டு அழுவாதே? இன்னும் படிப்பு முடிய கொஞ்சநாளுந்தான் இருக்கு! அதுனாலே நான் இங்க வாரவாரமெல்லாம் வந்து பார்க்கமுடியாது! அதுக்கப்புறமும் வேலைக்கு இண்டர்வியூ அதுஇதுன்னு நிறைய வேலை இருக்கு! அதுதான் ஒன்னை பார்த்துட்டு சொல்லிட்டு போலாமின்னு வந்தேன்!"

"ம்ம் எனக்கு ஏற்கெனவே இது தெரியும்! நீ இங்க இனிமே அடிக்கடி வர்றமாட்டேன்னு என்னோட ஃபிரண்ட் சொல்லிட்டா! அவளும் ஒன்னமாதிரி தானே படிக்கிறா! நாந்தான் வயசிலே ஒழுங்க படிக்காமே இப்போ சாணி பொறுக்கிறேன்"

"படிப்பை முடிஞ்சு வந்ததும் எங்கப்பன்'கிட்டே சொல்லி அனுமதி வாங்கிதரதுக்கு சாந்தியக்கா பொறுப்பு ஏத்துக்கிச்சு! அதுனாலே சந்தோஷமா இருடி!"

"ஓ என்னோட நாந்துனா அதெல்லாம் செய்யுறாங்களா? கணக்குவழக்கு இல்லாமே திட்டந்தான் தெரியுமின்னு தான் நெனைச்சேன்!"

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய கல்லூரி இறுதி படிப்புக்குண்டான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கல்லூரி கேம்ப்ஸ் செலக்சனிலும் பெரிய கம்பெனி வேலைக்குண்டான அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தன்னோட ஊருக்குள் வருகிறான் சரவணன். உறுதி அளித்தப்படியே சாந்தி அவளோட அப்பாவிடம் தன்னோட தம்பி,மகாலெட்சுமி கல்யாணத்தை பத்தி பேசுகிறாள்.

"யப்பே! தம்பியும் படிச்சி முடிச்சிட்டான்! அவனுக்கு வேலையும் கிடைச்சிருச்சுன்னு வேற சொல்லுறான்! இனிமே அவனுக்கு எந்நாந்துனா கொண்டி மாடு மகா'வே முடிஞ்சி வைச்சிரலாமா?"

"ஏந்தாயி அதுக்கு நானு அனுமதிக்கமாட்டேன்னு சொன்னா நீ என்ன பதில் சொல்லுவே?"

"ம்ம் என்னாப்பே இப்பிடி கேட்கிறே?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தாயி! நான் இன்னைவரைக்கும் அந்த பயலே ஆளாக்கி பார்க்கனுமின்னு தான் கண்டிப்பா இருந்தேன், காலேஸு போறன்னு சொன்னாங்கிறதுக்காக காடு கரையே வித்துதான் கொடுத்தேன், இவனும் ஒழுங்கதானே போயிட்டு வந்துட்டு இருந்தான், ஒன்னோட கலியாணத்துக்கப்புறம் பயக்கிட்டே மாத்தம் வந்துதான் அவனை சத்தம் போட்டுட்டே இருந்தேன், என்னோட சொல்லுக்காக தானோ என்னோவோ ஏதோ படிச்சி முடிச்சிட்டான், வேலையும் வாங்கிப்பிட்டேன்னு சொல்லுறான். ஒன்னே ஒன்னு ஆத்தா! நான் பெத்த ரெண்டுலே ஒன்னுக்கூட தரிசா போயிறக்கூடாதுன்னு நான் கடவுளா கும்பிடற இந்த மண்ணுக்கிட்டே வேண்டிக்கிட்டே இருப்பேன். விதை நெல்லை வித்துதான் சோறு பொங்கி திங்கனுமின்னு சொன்னா திங்காமே சாவான் வெவசாயி, என்னை மாதிரி மண்ணை நம்பி பொழைச்சனுவனுக்கு அதே வித்து அடுத்த விதை முளைக்க வைக்கனுமின்னு இருந்துச்சு, அது பதறா போயிரக்கூடாதுன்னு தான் பொத்தி வளர்த்தேன், இப்போ விளைஞ்சு அது கதிரா தான் வந்துருக்கு. இன்னவரைக்கும் கொழு கொம்பா நான் நின்னுட்டேன். அப்பனா இருந்து மவனே வளர்த்து காட்டிட்டேன், இனிமே ஏட்டிலே சொன்னமாதிரி அவன் என்னை ஒலகத்துக்கு அடையாளம் கட்டுவானுன்னு நம்புறேன், அவனோட ஆசைக்கோ விருப்பத்துக்கோ என்னிக்குமே குறுக்கிலே நிக்கமாட்டேன்"

இவ்வாறு சுப்பையா சொல்லி முடிந்ததும் அங்கே வந்து சேருகிறாள் மகா.

"ஆத்தி அப்பே! தம்பி மேலே இம்புட்டு பாசமா தான் இருந்தியா! வேதாந்தி மாதிரி ஒலக ஞானமெல்லாம் பேசுறே? கேட்டியாடி கொண்டிமாடு மகா! எங்கப்பு ஒங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறுச்சு"

"ஹிம்! அது அப்போ பேசிட்டு இருக்கிறோப்பவே வந்துட்டேன்! அதுதானே சொன்னனே? நீங்களாம் விஷக்கார குடும்பம் ஒங்களுக்கெல்லாம் விஷம் வைச்சாலும் கொல்லமுடியாது! இனி இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு கொன்னாத்தான் உண்டு."

Monday, May 14, 2007

ஆகீத்தா! ஐவத்து!!!

வாரம் பூராவும் அநியாயத்துக்கு வேலை வேலைன்னு கண்ணுமண்ணு தெரியாமே பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போச்சு, சரி நாமெல்லும் எங்கனயாவது போய் F5 ஆகிட்டு வரலாமின்னு பெங்களூரூ (பன்னேர்கட்டா) தேசிய மிருககாட்சி சாலைக்கு ஒரு குரூப்பாதாய்யா கிளம்பிபோனோம்.

நம்மளை பேச்சுலர் வாழ்க்கையே வெறுப்பேத்துற மாதிரி எல்லா பயலுகளும் ஜோடியோட திரியுறானுக!

ஹிம் என்னத்த சொல்ல அது ஒரு இம்சையா போச்சுங்க..... :(


நம்ம முன்னோரெல்லாம் பார்க்க மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்கியா'னு நம்ம பயப்புள்ள போன் போட்டு விசாரிச்சான்! அவன் எதுக்கு அப்பிடி கேட்டானுன்னு ஒரு இடத்திலே நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க!



(பி.கு:- செவப்பு கலருலே இருக்கிறது நானு விட்ட சவுண்டு)





அமைதியாதானே இருக்கோம், எதுக்கு அந்த சைட்லே இருந்து ஒரு போட்டோ?




இந்த சைட்லே இருந்து போட்டோ!! நாங்கெல்லாம் ஆம்பிளக'டா மண்டயா!




ஓ! ஆம்பி்ளக எலலாம் இவ்வளோ அழகா இருப்பாங்களா??? :)




உங்களுக்கு யாருங்க ஆபிசர் வெள்ளை பெயிண்ட் அடிச்சது??



சார்! கொஞ்சம் கேமரா பக்கத்திலே வாங்களேன்....!




இன்னும் கொஞ்சம் பக்கத்திலே வாங்க!!!




ஏன் சார்!! ஒங்களுக்கு எலும்புகறி பிடிக்காதா???





ஒன்னோட மொகரகட்டை'கெல்லாம் நான் போஸ் கொடுக்கமுடியாது...




இவனுகளுக்கு பொழுது போகலன்னா கேமேரா'வா தூக்கிட்டு வந்துறானுக? பெரிய புரொபசனல் கொரியர் மண்டயனுக!





சிபி'கிட்டே நீங்கதான் தொடை கறி கேட்டிங்களா???





பொழப்பு கெட்டவன் எதை போட்டோ எடுக்கிறான் பாரு???



அய்யோ!! அய்யோ!! பார்த்துட்டான்! பார்த்துட்டான்!!



தம்பி! ஒனக்கு இந்த டீ.ஆர் தெரியுமா?



ராசா அவருக்கிட்டே சொல்லி வை!



என்னாவா?? நேத்து ரெண்டு பசங்க வந்து என்னை பார்த்து "ஹைய்யா! டீ.ஆர்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்க!!



அதை கேட்டுட்டு எங்க கரடி இனத்துக்கே வந்து அவமானமா நாங்கெல்லாம் நினைக்கிறோம்.





தூரமா நின்னா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பக்கத்திலே வாம்மா மின்னலு?




சொன்னப்பேச்சை கேட்டு பக்கத்திலே வர்றீயா??? வாம்மா !! வா!!





டாய் ஓடிப்போயிரு! இல்லை, வரிக்குதிரை'கிட்டே கடி வாங்கி செத்தவன்னு பேரு வாங்கிறாதே?




"ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"





வந்துட்டானுக! கம்பி வழியா போட்டோ எடுக்க!




அடேய்! ஏண்டா நீயும் திங்க ஒன்னுமே வாங்கிட்டு வரலையா??




மழை பெய்ஞ்சா ஒங்க புள்ளியெல்லாம் அழிச்சிறாதா??



உங்களுக்கு யாருங்க ஆபிசர்! பல் விளக்கி விடுவாங்க?





அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா?



இவிய்ங்களுக்கு போஸ் கொடுத்து கொடுத்தே டயர்டாகி போச்சு..




ஹைய்யா! இப்போ போட்ட சோமாஸ் குளிக்கிது...,



ஓடி வந்துரு! யாரு குளிச்சாலும் பார்க்கிறாய்ங்க போக்கத்த பசங்க.....




அடேய்! நான் இப்போ சாப்பிட போறேன்... அதை போட்டோ எடுத்து வச்சு அதுக்கு ஒரு கமெண்ட் போட்டு வைக்காதே!




ஏலே! அரைடவுசரு சொன்னா கேளுடா!




விடு! விடு! அவனை பார்த்தாலே தெரியலை! திருந்தாத ஜென்மமின்னு!



ஹிம்! இப்போ பாரு ! சைட்'லே பொட்டிய தூக்கிட்டு வந்துட்டான்!




ஒன்னையெல்லாம்!




இந்த மரத்தை பிடுங்கி அடிச்சாதான் திருந்துவே ராஸ்கல்....



நோ கமெண்ட்ஸ்... ஹி ஹி

Monday, May 7, 2007

காதல் அரும்பிய தருணங்கள் - II

வழக்கமான இனியதொரு மாலைவேளையில்
கேள்விகளின் பிறப்பிடமான உன்னிடமிருந்து
காதல் கொண்டதேனென்று
இன்னுமொரு தரம் கணை

நினைவுட்டலில் என்மனம் பின்னோக்கி,

அதொரு கார்த்திகை மாதம்
வீதியில் விளக்கேற்றும் பெண்களில்
தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்!
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.


கருக்கலின் பிறகு கதிரவன் மின்னும்
பாங்காய் என்னின் இருள் மனதிலிருந்து
காதலின் ஒளி ஏற்றிய தினமது!

எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.

Wednesday, May 2, 2007

மதுரை சித்திரை திருவிழா


மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.

பிரத்யேக பாதை

அழகர் கடைசி வரைக்கும் என்னோட முணாவது கண்ணுலே சரியாவே வரலை, அதுனாலே சுட்டாச்சு

இனி விழா துளிகள்:-

ரொம்பவே நாட்களுக்கு பிறகு வையாத்திலே தண்ணி வந்தது.

காலை ஒன்பது மணிக்கே சுட்டெரித்த வெயில்

ஆத்திலே மொட்டை எடுக்கனுமா'ன்னு ஒவ்வொரு பத்தடிக்கும் விசாரிக்கும் நபர்கள்.

போலிஸின் கடுமையான கெடுப்பிடிகள்.

வழக்கம் போல் ஊர் முழுவதும் தண்ணிபந்தலும், அதிலே மோரும்,பனங்காரம்,ரஸ்னாவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது.

"ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?" "ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!"

"ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?"

"மாமா! காது குத்துறவரே காணோம், யாராவது ஆச்சாரி ஆத்துலே இருக்காங்களான்னு பாருங்க?"

"மொக்கயா! நம்ம சந்துவீட்டு பெருசு அரிசி பருப்பு வாங்கிட்டு போச்சே? என்னோமோ அழகர் திருவிழா அன்னிக்கு ஆத்துக்குள்ளே சோறு ஆக்கி போடபோறன்னு? எங்கன்னு தேடு? வந்ததுக்கு சாப்பிட்டாச்சும் போவோம்"

"எத்தேய்! இங்கன எப்போ இடம் வாங்கிப்போட்டே? சாமியெல்லாம் மண்டகப்படிக்கு வந்து போறளவுக்கு சம்பாரிச்சிட்டியா?"

"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்? எங்கடா அவிய்ங்களே?"

"ஆத்தி ஏழுமணிக்கு ஊமை வெயிலு மண்டையே பொளக்குது, வாங்கடா சீக்கிரமே வீட்டே பாத்தி ஓடுறுவோம்."

ஹி ஹி நமக்கு காது கொஞ்சம் தெளிவாதான் கேக்குமிங்க.... :)

Monday, April 16, 2007

வ.வா.சங்கத்து பரிசுப்போட்டி

வணக்கம் மக்கா,

நமது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பரிசுப்போட்டி ஒன்னை அறிவிச்சிருந்தோம். போட்டின்னா பெருசா ஒன்னும் இல்லிங்க.. நகைச்சுவை பதிவு எழுதி அதை எங்களுக்கு அதை தெரியப்படுத்துங்கன்னு இந்த பதிவிலே அறிவிச்சிருந்தோம். உங்க வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை உங்களை பிரதானப்படுத்தமால் ஏதாவது ஒரு கற்பனை கதாப்பாத்திரத்தோடு பிணைந்து பதிவு எழுதித்தாருங்கள். ஆப்பு வாங்கியிருந்தா கைப்புள்ள கதாபாத்திரமின்னு நினைச்சு எழுதிறாதீங்க, அப்புறம் சங்கத்திலே எங்களாலே மேற்கொண்டு பதிவு போடமுடியாது... :)

எனவே புதுவிதமான பாணியிலே சங்கத்தை மெருக்கேற்ற உங்களின் பதிவு அமைந்தால் நலம். விதிமுறைகளாக பெருசா ஒன்னும் வைக்கலிங்க..



1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை (கைப்புள்ள'யை விட்டுருங்கப்பா)

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6) பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.

7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஹி ஹி)

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பதிவிற்கு இந்திய ரூபாய் ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

பதிவுகளை அனுப்பி வைக்க கடைசிநாள்:- 22-04-2007 11.59 IST

அப்பிடியே உங்க வலைப்பூவிலே நம்ம சங்கத்தோட பரிசுப்போட்டிக்கு தட்டி வைச்சிட்டிங்கன்னா ரொம்பவே மகிழ்ச்சி, அதுக்காக நீங்க ரொம்ப கஷ்டபடவேணாமிங்க.... கிழே இருக்கிற சுட்டியை ஒரு தடவை கிளிக்'ங்க... அதுவே உங்களை பிளாக்கர் பக்கத்துக்கு கூட்டிட்டு போய் அதுவே எல்லாவேலையும் செஞ்சுரும்.












உங்களோட பங்களிப்பை எதிர்நோக்கும் சங்கத்து சிங்கங்கள்..

Wednesday, April 11, 2007

அழகென்ற சொல்லுக்கு....

ஒரு நாள் அர்த்தராத்திரியிலே சேட் பண்ணிட்டு இருக்கிறப்போ தீடிரென்னு கதிர் வந்து அழகுன்னா நீ என்ன நினைக்கிறே'ன்னு கேட்டார். எனக்கு அப்போ சொல்லுறதுக்கு ஒன்னும் தோணலை.எதோ ஒன்னை சொன்னேன், அவர் நம்ம கொத்ஸ்'கிட்டே போயி விளக்கம் கேட்க அவரும் தன்னோட முதுமையிலே கூட இன்னும் தான் இளமையாக எழுதுறதுதான் அழகுன்னு சொல்லி கதிரை ஏமாத்தினதும் மட்டுமில்லாமே அழகை பத்தி பதிவென்னு இட்டு சங்கிலி தொடரா ஆரம்பிச்சி விட்டார். அது அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கவிஞர் அய்யனாரும் எழுதி கடைசியா என்னை இழுந்து விட்டுட்டாரு...

அழகுன்னா என்ன'ன்னு ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேங்க.. ஆனா கொஞ்சகாணு மேட்டர் கிடைச்சிருக்கு, இதெல்லாம் அழகா'ன்னு முழுசா படிச்சிட்டு கேட்டு அடிக்க வந்துறாதீங்க, ஏன்னா ஒங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் அது அழகு இல்லை :)

முருகன்:-


அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்தவேல் முருகா - கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா - மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

இந்த பாடலை கேட்கிறேன்,கேட்டு கொண்டே இருக்கேன். எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது, அதுவும் என்னையறியமாலே குழப்பத்துடனே சில கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள் இருக்கா இல்லையா என தர்க்கரீதிக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிற Agnostic கோஷ்டியை சேர்ந்தவந்தான் நானும். ஆனால் முருகனை கடவுள் உருவமாய் உருவகப்படுத்த முடியவில்லை. கல்லூரி தினங்களுக்கு அப்புறம் Agnostic நிலையில் தீவிரமான பின்னும் இன்னமும் முருகனை மட்டும் ஏத்துக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட சிறுவயது பழக்கம்தான் அது. ஒரு காலகட்டத்தில் முழுவதுமான ஆத்திகவாதியோ இல்லை நாத்திகவாதியோ ஆனால் கூட எந்தமிழின் செல்வன் முருகன் தான் என்றென்றும் அழகன்.

குறும்பு:-

பெரியாளாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் என்னை சுற்றுவட்டாரத்தில் அடையாளப்படுத்தபடும் வார்த்தை ரெட்டைசுழி வாலு. அந்தளவுக்கு ரொம்பவே குறும்பு பண்ணிருக்கேன். அஞ்சு அல்லது ஆறு வயசு சமயத்திலே ஏதோவொரு இடத்திலே ஓசி சர்க்கரை பொங்கல் வாங்கப்போயி ரொம்ப நேரம் கழிச்சி வந்தேன். படிக்கமாமே வெட்டியா ஊர் சுத்தப்போயிட்டேன்னு அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்... அவங்க அதை பார்த்து அழுது நானும் அழுதுட்டே ஆஸ்பத்திரி போறப்போ "அம்மா அந்த சர்க்கரை பொங்கலை வீட்டுக்கு போனதும் சாப்பிடுறேன்"ன்னு சொன்னதும் அழுதுட்டு இருந்த அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இன்னொரு சம்பவம் இதேமாதிரிதான் அதுவும் அதே வயசுன்னு தான் நினைக்கிறேன். எங்க மாமா கல்யாணம் திருப்பரங்குன்றத்திலே நடந்துச்சு, கல்யாண முதல் நாள் வரவேற்பிலே நான் எங்கேயோ வழித்தெரியாமே தொலைஞ்சு போயிட்டேன். கோவிலுக்கு பக்கத்திலே நின்னுட்டு அழுதுட்டு இருந்தோப்பா ஒருத்தர் போலிஸ் ஸ்டேசன்'லே கொண்டு விட்டார்..அங்கே போனதிலே இருந்து ஒரே அழுகைதான், போலிஸெல்லாம் பயந்து போயி என்னாடா வேணும் ஒனக்குன்னு கேட்க.. நான் இதுதான் சான்ஸ்'ன்னு முட்டை பொரட்டா கேட்டேன், ஏன்னா அதுக்கு மொதநாளுதான் எங்கப்பா வாங்கிதரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அவங்களும் அதை வாங்கிட்டு வர்ற போனநேரத்திலே எங்க சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. எங்கப்பாவும் அம்மாவும் அழுதுட்டே என்னை கூட்டிட்டு போறப்பா அப்போவும் "அப்பா அந்த போலிஸ்ண்ணே எனக்கு முட்டை பொரட்டா வாங்கிட்டு வந்துருப்பாங்க"ன்னு சொன்னதும் எங்க மாமா புதுமாப்பிள்ளை விட்ட சாபம் இன்னமும் ஞாபகத்திலே இருக்கு, "அடேய் ஒனக்கும் இதே திருப்பரங்குன்றத்திலே கல்யாணம் நடக்கும், நீயும் இப்பிடிதான் என்னை மாதிரி அலைய போற?" :)

இன்னமும் எங்க சொந்தகாரங்க என்னை இப்போ பார்த்தா நம்பவே மாட்டாங்க.. நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு....

குழந்தைகள்:-

எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயங்களிலே இதுவும் ஒன்னு. என்னோட அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ என்கிட்டேதான் சர்க்கரை தண்ணி ஊத்துன்னு சொன்னாங்க. (தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்). அப்போதான் பிறந்து சிலமணி துளிகள் ஆனா அவனை மடியிலே வைச்சு சும்மாகாச்சிக்கு சர்க்கரை தண்ணின்னு சொல்லி ஸ்பூனை காட்டுன்னேன். அடடா என்னவொரு அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன். இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.

தனிமை:-

இதை பத்தி நான் ஏற்கெனவே எழுதி தள்ளிட்டேன். ஆனா என்னை பொருத்தவரைக்கும் அது என்னை ஆட்கொண்டது ரொம்பவே அதிகம், சிறுவயசிலே ரொம்பவே அதிகமாக வாயாடிட்டு இப்போ கொஞ்சமே அமைதியான மனோபவத்தை வளர்ந்துக்கிட்ட பிறகு தனிமை தனிமை தான். சிலவருடங்களுக்கு முன்னாடி குற்றால அருவிகளுக்கு சுற்றுலா போயிட்டு ரெண்டு நாள் பசங்ககூட சுத்திட்டு இருந்தேன், ஆனா தீடிரென்று தனிமையிலே இருக்கனுமின்னு தோணினதும் யாருக்கிட்டேயும் சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன். எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு. அப்போ கவிதை எழுத கிடைச்ச எண்ணங்கள் நிறைய... அதெல்லாம் கவிதையா வடிச்சி சூடு ஆறிப்போயி என்னோட டைரியிலே தூங்கிட்டு இருக்கு...


மதுரை:-

கழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது. அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.

அந்தவகையிலே என்னோட ஊர் ரொம்பவே அழகு, மீனாட்சி அம்மன் கோவில் எதிரிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு மதியவேளைகளிலே கோவிலுக்கு போயி விளையாடுற அந்த தருணங்கள் இன்னமும் அழகு.

தமிழ்:-

மதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பிடித்தமான அழகுன்னா நம்ம மொழியோட அழகுதான். இரட்டை கிளவிகளும், வெண்பாக்களும்,குறளும், காப்பியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள். ஒவ்வொரு பகுதியிலும் வேவ்வேறுவிதமா பேசினாலும் அதொட தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது அழகு. எந்த மொழிக்கும் அழகே அதோட எந்தவொரு பிறமொழி கலந்தாலும் அம்மொழியோட வளம் கெட்டு விடக்கூடாது. அந்தவகையில் நமது தமிழ் சொல்வளமிக்க மொழி. இன்னமும் அதை நல்லமுறையில் பயன்படுத்தி பிற்சந்ததியினரும் நம்தமிழ் மொழியை நினைத்து பாரதி சொன்னது போல பெருமிதப்பட வேண்டும்.

என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..

இதுப்போல அழகாக??? பதிவு எழுத நான் அழைக்கும் மூவர்:-

மருத இளவரசர் தருமி ஐயா..
.
மருத சிங்கம் குமரன்...
சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)

சிறப்பு அழைப்பாளராக எங்கள் மருத சிங்கத்திலென்று பங்காளி
(அண்ணே நான் கூப்பிட்டுட்டேன், யாரும் கூப்பிடாமலே பதிவு போட்டாச்சுனு ஃபீல் பண்ணாதீங்க)

Friday, April 6, 2007

வெட்டிகாரு செப்பண்டி........

சில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம பாஸ்டன் புயல், பாலாஜி. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...

நான்:- "வாப்பா பாலாஜி, இன்னும் தூங்கலையா?"

வெட்டி:- "வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை?"

நான்:- "ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா?"

வெட்டி:- "ஐயோ நீங்களுமா? அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க!"

நான்:- "திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா?"

வெ:- "பார்த்தீங்களா? நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க?"

நா:- "ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே? இல்லே! இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா"

வெ:- "அண்ணே! ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா?"

நா:- "ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே!"

வெ:-" அப்போ சரி! அதை உண்மைன்னு வைச்சுக்கோங்க! இப்போ வேற டாபிக் பேசலாம்!"

நா:- "இன்னொரு நாள் அந்த வேற டாபிக்கை பத்தி பேசலாம்! இன்னிக்கு சுமா டாபிக் பத்தி மட்டுமே பேசுவோம்!"

வெ:- ":(((((((((((("

நா:- "எதுக்கு இத்தனை அழுவாச்சியை போடுறே?"

வெ:-" பின்னே அழாமே? என்ன செய்யுறது? நீங்க இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்!"

நா:- "ஏலேய்! என்ன சதி இடியாப்பத்துக்கு சொதி'ன்னு பேசிட்டு இருக்கே? உண்மைய சொல்லு? அது நிஜத்திலே நடந்த கதையா? இல்லய்யான்னு?"

வெ:-"ஐயோ அது கற்பனை கதை தாண்ணே!"

நா:- "அப்பிடின்னா ஏன் அடுத்து இந்தியா வர்றப்போ சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ வர்றாமே நேரா ஹைதராபாத்'க்கு போறே? சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே! அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு! இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே? அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா?"

வெ:- "இப்போ வாய் விட்டு அழுதுட்டு இருக்கேன்! என்னை விட்டுருங்க!"

நா:- "டேய் டேய் நீயாவது அழுவுறதாவது? அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே? கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா?"

வெ:-" அண்ணே நான் ஆணியே பிடுங்கலே! என்னை இப்போதைக்கு விட்டுறுங்க!"

நா:- "அடடே இப்பிடியெல்லாம் வடிவேல் வசனம் பேசுனா நாங்க சிரிச்சிட்டு விட்டுருவோமா? உண்மைய சொல்லுடி கண்ணு? எதுக்கு ஒன்னோட விமானம் ஹைதராபாத்'லே தரையிறங்க போகுது'ன்னு?

வெ:- "ஐயோ! எதுக்கு இப்பிடி அப்பிராணியே போட்டு பாடாப்படுத்துறீங்க? நான் நல்லவண்ணே!"

நா:- "இப்போ யாரு நீ நல்லவன் இல்ல! கெட்டவன்னு சொன்னது! இப்பிடி கண்டம் விட்டு கண்டம் பேசுறதே சுமா'ன்னா யாரு? அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான்?"

வெ:-"அண்ணே டிவியிலே வர்றமாதிரியே பேசுறீங்க! நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு? அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி தெரிஞ்சது?"

நா:- "அதுதானே! அப்பிடி வா வழிக்கு? அப்போ நீ இந்தியா வர்றதும் உண்மை அதிலே ஹைதராபாத் போறதும் உண்மை! அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே?"

வெ:-"உண்மை!உண்மை'ன்னு ஏண்ணே இப்பிடி பேசியே உசுரை வாங்குறீங்க?"

நா:- "நீ எவ்வளோ நாளா அந்த சுமா பொய் பொய்'ன்னு சொல்லிட்டு இருந்தே? நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா!"

வெ:- "என்ன எல்லாருக்கும் பண்ணுறமாதிரி கரகாட்டம் வைச்சு வரவேற்க போறீங்களா??"

நான்:- "என்னாப்பா இப்பிடி சொல்லிட்டே? நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம்! ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்! "

வெ:- "அடபாவிகளா! ஏய்யா இப்பிடியெல்லாம் கொலைவெறியோட திரியீறீங்க?"

நா:- "ஆஹா இன்னொன்னு மிஸ் ஆகிடிச்சு! நீ ஒரு பக்கம், சுமா ஒரு பக்கம் இன்னொரு பக்கம் துணை நடிகைஸ், அதிலே இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"

நா:- "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"

வெ:- "ஆஹா மொத்ததிலே என்னைய வெச்சு படமே எடுக்க போறீங்க! எனக்கு தூக்கம் வருது! போயி தூங்குறேன்!"

நா:- "கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"

மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க.....

Tuesday, April 3, 2007

காதல் அரும்பிய தருணங்கள்!!!

காலைப் பனி
ஈரம் உதிர்க்கும் இலைகள்
வெயிலறியா மரத்தடி
உன் தலையை சுமந்த என் நெஞ்சம்
கண்களிரண்டையும் கலக்கவிட்டு தொடுக்கிறாய்
கேள்விக்கணை ஒன்றை!
காதல் கொண்டதேனென்று

பேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்
அறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை
சொல்ல வாயெடுத்தும் வேண்டாமென்று
புன்னகை துளிர்த்தேன்

புன்னகைக்கு புன்னகையையே
பதிலிறுக்கும் இந்தப் புன்னகைதான்
காரணமென்று
வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,
சொல்லித் தெரிவதில்லை காதல்.

Tuesday, March 27, 2007

weirder habits .....

என்கிட்டே இருக்கிற விசித்திர குணத்தை சொல்லணுமின்னு நம்ம பாசக்கர பயப்புள்ள ஜி கூப்பிட்டுருக்காரு, அவரு கூப்பிட்ட அஞ்சு பேருகளிலே வெட்டி, CVR,இம்சையரசி, இணைய பாடகி மருதம்ன்னு எல்லாரும் பதிவு போட்டுட்டாங்க. என்னை இன்னும் அவரு கூப்பிட்டாரு, அப்புறம் இவரும் கூப்பிட்டாருன்னு பொய் சொல்லமுடியலைங்க, ஏன்னா நம்ம ஜியை தவிர வேற யாரும் என்னை கூப்பிடலை, என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....?? :)




வாசிப்பு:- புத்தக வாசிப்பு இல்லைன்னா நானே இல்லேன்னு சொல்லணும், எந்நேரமும் ஏதாவது ஒன்னை வாசிச்சுட்டு இருப்பேன், எங்க என்ன கிடைச்சாலும் அதிலே என்னமாவது எழுதிருக்கான்னு வாசிப்பேன், ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.

சின்னவயசிலே எனக்கும் என்னோட அக்காவுக்கும் வெள்ளிக்கிழமை காலையிலே சிறுவர்மலர் படிக்கிறதுக்கு பெரிய சண்டையே வரும், அதுவும் எனக்கும் அந்த புத்தகம் வந்ததும் மொத ஆளா நாந்தான் படிக்கனுமின்னு ஒரு பைத்தியம் உண்டு, இன்னும் இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும், அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு, ஆனா எங்கப்பா நான் படிக்கிறோப்ப நடுப்பக்கத்தை கொடுன்னு கேட்டு நச்சரிப்பார், நான் எதையும் கொடுக்கமாட்டேன், இதுனாலே பெரிய சண்டை வந்து எங்கப்பா நடுப்பக்கத்தை பிடுங்குவாரு, நான் அவரோட கோபத்தை கூட்டுறதுக்கு நீயூஸ் பேப்பர் மொத்தயும் ஸ்டாப்ளர் பின்'னடிச்சுட்டு படிப்பேன்.

படிக்கிற புத்தகங்களிலே கதை,கட்டுரை,பிக்சன்,லொட்டு லொஸ்குன்னு எதையும் பிரிச்செல்லாம் வாங்கி படிக்கிறதே கிடையாது, குறிப்பிடத்தக்க முறையிலே என்னை கவர்ந்த எல்லா புத்தகங்களை கணக்குவழக்கிலாமே திரும்ப திரும்ப படிப்பேன், சிலசமயம் கல்கி அவரோட செல்வனை பத்தி சொல்லுறதையும் ஷிட்னி ஷெல்டன் தன்னோட கதாநாயகியோட கதையை ஆரம்பிக்கிறதையும் படிப்பேன்,படிப்பேன், படிச்சிட்டே இருக்கேன்.

ஞாபக சக்தி:- இது என்க்கிட்டெ இருக்கிற பெரிய பிரச்சினை, முக்கியமான கடவுசொல் எல்லாம் மறந்து தொலைஞ்சிரும் ஆனா நான் யாருக்கிட்டே வாங்கினதோ இல்லை நான் யாருக்கோ கொடுத்த வசவுசொல் மட்டும் அப்பிடியே ஞாபகம் இருக்கும். நான் திட்டு வாங்கிருந்தேனா அதை ஞாபகம் வைச்சிட்டு அவங்கிட்டே பேசவே மாட்டேன், அவங்களே வந்து தான் செஞ்சது தப்புன்னு வந்து கேட்டாலும் அந்த மன்னிப்பை ஏத்துக்காத மனோபாவமெல்லாம் இருந்துச்சு, ஆனா இப்போ எல்லாம் கொஞ்ச கொஞ்சமா என்னையே நானே மாத்திட்டு வாறேன், ஆனா புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.

தனிமை:- சிலசமயங்களிலே ஆள் ஆரவமற்ற காட்டிலே நம்ம மட்டும் தனியா இருந்தா எப்பிடியிருக்குமின்னு நினைச்சு பார்த்துக்குவேன், அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு. இன்னமும் வீட்டிலே வாரக்கடைசியிலே தனியா உட்கார்த்துருப்பேன், நண்பர்கள் எல்லாம் வெளியே போலாமின்னு போனாலும் சரி, நான் எங்கேயும் போகமே அப்பிடியே தனியா வீட்டுக்குள்ளே இருப்பேன், நானும் என்னை சுற்றியிருக்கிற அந்த வெறுமையும் தான் பிடிக்கும்.

அறிவுரை:- இது எனக்கிட்டே இருக்கிற கெட்டகுணம்.எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் அறிவுரையை அள்ளி தெளிப்பேன், ஒரு தடவை எங்க கம்பெனி VP கூட மீட்டிங், அவருக்கும் அங்கே வழக்கம்போலே அறிவுரையை அள்ளிக்கொட்டொ கொட்டுன்னு கொட்டி என்னையே பார்த்தாலே இப்போ ஓடிப்போயிருவாரு.ஊர்ப்பக்கம் போனா யாராவது படிக்கிற பசங்க வந்து படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வேலையை பத்தி பேசிட்டா போதும், ஆரம்பிச்சிரும் அறிவுரை அய்யாசாமி பெர்சனாலிட்டி.... இப்போதைக்கு ஜாவா தான் பீக், போனத்தடவை இருந்தமாதிரி VB'க்கு இப்போ மவுசு இல்லேன்னு அள்ளித் தெளியோ தெளிச்சிருவேன்.

ஆர்வக்கோளாறு:- சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், ஆனா எதையாவது கத்துகணுமின்னு அதை போட்டு நோண்டுறது, வீட்டிலே அந்தமாதிரிதான் எல்லா எலக்ட்ரிக்கல் திங்க்'ஸிலே ரிப்பேர் பார்க்கிறேன்னு ஒப்பேத்திருவேன். அந்த வகையிலே எல்லாரும் எழுதுறமாதிரி நாமெல்லும் பதிவு எழுதிப்பிடாலமின்னு தைரியமா பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சது. ஆனா இன்னவரைக்கும் உருப்படியா ஒன்னுமே எழுதினதே கிடையாது. எல்லாமே ஆர்வக்கோளாறிலே ஓப்பேத்தின கணக்குதான்.

இந்த மாதிரியெல்லாம் மொக்கை போடாமே நல்லா எழுதமின்னு கூப்பிட போற அஞ்சு பேர்:-

1) தல கைப்புள்ள,
2) விவசாயி இளா,
3) மதுரை தங்கம் தீக்ஷ்ண்யா,
4) பாசமலர் அவந்திகா,
5) பாசமலர் தூயா,

தலைப்புக்கு காரணமறிய இங்கே சுட்டுங்கள்.;)

[பிற்சேர்க்கை:- இந்த மாதிரி மடத்தனமா தலைப்பு வைச்சதுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்... :( ]

Friday, March 23, 2007

"When I was in US..."

"The United States of America is a country of the western hemisphere, comprising fifty states and several territories. Forty-eight contiguous states lie in central North America between the Pacific and Atlantic Oceans, bound on land by Canada to the north and Mexico to the south; Alaska is in the northwest of the continent with Canada to its east, and Hawaii is in the mid-Pacific. The United States is a federal constitutional republic; Washington, its capital, is coextensive with the District of Columbia (D.C.), the federal capital district."


இதெல்லாம் நான் சொல்லலைப்பா, விக்கிபீடியா'லே இருக்கு.. இப்போ எதுக்குடா இதுன்னு கேட்கிறீங்களா? அப்போ கிழே இருக்கிறத படிச்சி பாருங்க...

நம்ம பசங்க அடிச்சு பிடிச்சு புதரகத்துக்கு போயிட்டு திரும்பி வந்ததுக்குப்புறம் அவனுக பண்ணுற அலப்பறை இருக்கே, ஐயோ சாமி அதெல்லாம் சொல்லி மாளாதுய்யா? என்னோமோ செவ்வாய்கிரகத்துக்கு ராக்கெட்'லே போயி அப்பிடியே அவங்க வீட்டுவாசலிலே இறங்கின கணக்கா பந்தா கட்டுவானுக. காலையிலே எந்திரிச்சு குளிக்கனுமிங்கிற பழக்கம் எல்லாம் போயி கிழிச்சு போன கோணி மாதிரி இருக்கிற ஜீன்ஸ் ஒன்னே போட்டுகிட்டு அமெரிக்கா'லே இது வாங்குனது'ன்னு காட்டுறதுக்காக சட்டைபிராண்ட் பேரை வெளியே தெரியுறமாதிரி இருக்கிற நாலு சட்டையை வாங்கிட்டு வந்துட்டு போட்டு திரிவாய்ங்கே. அதுக்குமேலே நாத்தமருந்து வேற அடிச்சு அவனையும் கடிக்கலாமின்னு வர்ற கொசுவெல்லாம் கொன்னு போட்டுப்பிடுவாய்ங்கே.

ஆரம்பகாலங்களிலே முக்குகடையிலே கொஞ்சகாணு தண்ணி வாங்கி குடிக்கவே அந்த கடைக்காரருக்கு ஐஸ் வைச்சிட்டு திரிஞ்ச பயலுக எல்லாம் அங்கிட்டு போயிட்டு வந்ததும் அந்த கடைக்காரருகிட்டே ஐஸ் மினரல் வாட்டருன்னு ஐநூறு நோட்டை எடுத்து காட்டுவானுக.

அதே கடையிலே எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி வாங்கினதெல்லாம் மறந்துட்டு "கெட் மீ கேண்டி"ன்னு கேட்கிற பயலுக நாக்கை இழுந்து பிடிச்சு அறுக்கத்தான் தோணும்.நம்மளை பின்னாடியே வர்ற மணிநாயிக்கு 2ரூவா கொடுத்து டைகர் பிஸ்கட் வாங்கி போடலமின்னு நினைச்சா ஓ டாக்'க்கெல்லாம் ஏண்டா குக்கீஸ்'ல்லாம் போடுறீங்க?'ன்னு கேட்கறவங்களை ஏண்டா அமெரிக்கா பைபாஸ் ரோட்டிலே வச்சு லாரிகாரய்ங்கே தூக்காமே விட்டுயாங்கன்னு நாமே கடுப்போட கேட்டா அதிலேயும் அதுக்கு அவிய்ங்கே கொடுக்கிற நொணநாட்டிய பதிலு, "அங்கே நாங்கெல்லாம் பைபாஸ் ரோடு'ன்னு சொல்லமாட்டோம், Freeway'ன்னு தான் சொல்லுவோம்... :(

அடேய் அரைடவுசரு மண்டையங்களா நாலு மாசம் அமெரிக்கவிலே குப்பை கொட்டுனதுக்கே இம்பூட்டுடா, புஷ்'க்கு PA வேலை எதும் பார்த்துட்டு வந்துட்டா நம்ம பக்கத்திலே வர்றதுக்கு மோப்பநாயை விட்டு சோதனை பண்ணிப் பார்ப்பாய்ங்கே போலே!

சரி போதுமிடா வா இவனுக்கு நாலு பொரட்டா'வே வாங்கி கொடுத்து வீட்டுக்கு பத்திவிட்டுறனுமின்னு எப்பவும் போற ஹோட்டலிலே போனா அங்கேயும் வந்து ஆரம்பிச்சிறவனுக. நீங்க சமைக்கிறதுக்கு யூஸ் பண்ணிற ஆயில் ஃபேட் ஃபிரி'தானே'ன்னு விசாரிக்கிறதும், காசு கொடுக்கிறேன்னு சொல்லி பந்தாவா போயி கிரிட்டிட்கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா'ன்னு அவியங்கே பர்சிலே அடுக்கி வைச்சிக்கிற அஞ்சாறு அட்டைகளை எல்லாருக்கும் தெரியுனுமினும்கிறத காட்டிக்க கேட்கிறதும் நினைச்சு பார்த்தாலே இன்னும் நாலு அணுகுண்டுகளை போட்டு அவிய்ங்களை பூரா சிதைக்கனுமின்னுறே அளவுக்கு கோவம் வரும்!.

இம்புட்டு அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மூச்சுக்கு முன்னூறு தடவை, "What a hell, i feel sultry ,அங்கே அடிக்கிற குளிருக்கு நாங்க எப்பவுமே ஜெர்கின் போட்டுதான் திரிவோமின்னு ஏகத்தாள பேச்சு வேறே? இதெல்லாம் தாண்டி பெரிய கொடுமை என்னான்னா தான் ஒரு ஃபாரின்ரிட்டன்'கிறத காட்டிக்கிறதுக்கு வந்து பத்து மாசமானலும் தூக்கிட்டு திரியுற பேக் எல்லாத்திலேயும் ஃபிளைட் டேக்'ஐ மாட்டிக்கிட்டு திரிவானுக.

டிஸ்கி #1:-

இந்த பதிவு கிழ்கண்ட யாரையுமோ இல்லே அவங்க போட்ட போஸ்ட்'க்கு எதிர்வினை இல்லைன்னு அடிச்சு சொல்லிக்கிறேன்.

தேன் சிறில்
வெயிலில் மழை ஜி
ஜாவா பாவலர்

டிஸ்கி #2:-

தலைப்புக்கு காரணம் அவிய்ங்கே இங்க வந்ததும் அடிக்கடி சொல்லுற வார்த்தை:)