Friday, November 17, 2006

பாண்டியநாடு சோறுடைத்து!!!

மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்த காலஅளவீடுகளான கிமு.களில் முந்தியே ஒரு மொழிக்கே சங்கம் வளர்ந்த பெருமைக்குரிய நகரமாகும்.



மாட மதுரை', 'மதுரை மூதூர்', 'மணி மதுரை', 'வானவர்உறையும் மதுரை', 'மாண்புடை மரபின் மதுரை', 'ஓங்கு சீர் மதுரை', 'மண மதுரை' எனப்பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். 'மதுரைப் பெருநன்மாநகர்' என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். 'மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர்மதுரை' என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். 'தமிழ் கெழுகூடல்' எனப் புறநானூறும்,'பாடு தமிழ் வளர்த்த கூடல்' என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினைஎடுத்துரைக்கும். (நன்றி திண்ணை)

இவ்வற்றையும் தவிர்த்து மதுரை இன்றைய நாள்களில் உணவுவிடுதிகளுக்கும் புகழ்பெற்றது என அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும். அது ஒரு வகையில் உண்மையே என அந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றமுறையில் ஏற்றுக்கொள்வேன், பஞ்சம்பிழைக்க பெங்களுருக்கு வந்தப்போது எங்கூரு போலவே இங்கேயும் இரவில் எந்நேரமும் சிற்றுண்டி கிடைக்குமின்னு நினைத்து அந்த நினைப்பிலே மண்தான் விழுந்தது. இங்கே மிகச்சரியாக 9.30 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் அடைக்கப்படும்.



ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம். உணவுகளின் வியாபாரத்துக்கு இரவென்றோ பகலன்றோ எவ்வித வேறுப்பாடுகள் கிடையாது. அவ்வகையான மூன்றுவேளைகளிலும் கிடைக்கும் வரிசைப்படுத்துக்கிறேன். இவைகள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றுப்புறத்திலே அமைந்ததுதான்.


காலை:- சிலவருடங்களுக்கு முன்னர் மதுரை மாடர்ன் ரெஸ்ட்ரண்ட்'லே வெண்பொங்கல் சாப்பிட பெரிய கீயூ'வே நீக்குமின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ அந்தளவுக்கெல்லாம் இல்லை.காலை வேளைகளில் கிடைக்கும் வெண்பொங்கல்,வடை ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் பொங்கலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து அதிலே தூவியிருப்பார்கள். அதுவும் நாலுபேரு சாப்பிடபோயிருந்திங்கன்னா அதிலே யாருக்கு நெய்முந்திரி வந்திருக்குன்னு கண்டுபிடிச்சி சாப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும். அதேமாதிரி மசால் தோசையும் ரொம்ப நல்லாயிருக்கும். தோசைக்கு தொட்டுக்கிற கிடைக்கும் மல்லிச்சட்னி,மிளகா சட்னி,புதினா சட்னி எல்லாமே நல்ல சுவையா இருக்கும். இந்த ஹோட்டல் நேதாஜிரோட்டிலே இருக்குங்க.அப்பிடியே வெளியே வந்து விசலாத்திலே ஒரு ஸ்டராங்காப்பி சாப்பிடிங்கனா போதும்.அதே நேதாஜி ரோட்டிலே இன்னோரு ஹோட்டலும் ரொம்ப பேமஸா இருந்திச்சு ஆனா இப்போ இல்லே, அதோட பேரு ஆரியபவன்.



மதியம்:- இவ்வேளைகளில் சாப்பிட நிறைய இடம் இருக்குங்க. அதுவும் தென்னிந்திய வகைகளுக்கு ரொம்ப நிறையவே இருக்குங்க. நான் சொல்லப்போறது ஒரு வடநாட்டு உணவகம், அதோட பேரு மோகன் போஜனலாயா. இங்கே நார்த்இந்தியன் தாலி'ன்னு கேட்டிங்கன்னா ஒரு பெரிய தட்டிலே நாலு சுக்கா சாப்பாத்தி தொட்டுக்க ரெண்டு,மூணு கறியும் கொடுப்பாங்க, அதுக்கு முன்னாடி அவங்க ஸ்பெசலான ரசமலாய் கொஞ்சக்காணு வாங்கி டேஸ்ட் பார்த்துறுங்க. வேணுங்கிற அளவுக்கு ரொட்டி வாங்கிசாப்பிட்டு சாதம் வாங்கி ரசமும், கெட்டிதயிரை ஊத்தி முடிச்சிட்டா வயிறு நிறைச்சிரும். அங்கேயே ஸ்வீட்பீடாவும் கிடைக்கும். இந்த விடுதி மேலக்கோபுரவாசல் வழியா வெளியே வந்திங்கன்னா அந்த பகுதி வீதியிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இரவு:- மாலைவேளைகளில் நிறைய இடங்களிலே இட்லி,தோசையும் கிடைக்கும்.நான் சொல்லப்போறது ரொம்ப பேமஸான ஒரு ஹோட்டல், அதுவும் அரசியல் விவகாரமெல்லாம் நடந்தது. அது வேற எதுமில்லே முருகன் இட்லிகடைதான்.அங்கே போனீங்கன்னா ஒரே ஒரு ஸ்பெசல் ஐட்டமான பொடிவெங்காய ஊத்தப்பம் சாப்பிடலாம். நாங்கெல்லாம் அங்கே போனா அது மட்டுந்தான் சாப்பிடறது. ஊத்தப்பத்திலே நெய் ஊத்தி சும்மா செவக்க வேகவைச்சிருப்பாங்க, ஆர்டர் பண்ணி வரதுக்குள்ளே ரெண்டுஇட்லி நாலு சட்னி, பொடி எண்ணெய், சாம்பார் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிங்கன்னா வந்திரும். அப்பிடியே சூடா சாப்பிட்டா நல்லாயிருக்கும். இது மேலமாசிவீதியிலே இருக்கிற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் பக்கத்திலே இருக்கு.

கொறிக்க:- இது எல்லா ஊருகளிலும் கிடைக்கிறதுதான், ஆனா எங்க ஊருலே ஒரு ஸ்பெசலா ஜிகர்தண்டா.. இதுயென்னா கொறிக்கவான்னு கேட்கப்பிடாது. அது ஒரு டேஸ்டா இருக்கும். நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா இதே ஒரு கிளாஸ் அடிச்சா சும்மா சில்லுன்னு இருக்கும். அதே தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது பால் பொருட்களும், கடல்பாசியுக்கிறதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு கெடுதியில்லை. ஆனாலும் நம்மாளே ரெண்டு,மூணு கிளாஸ்தான் சாப்பிடமுடியும்.



இன்னோன்னு நீங்க இரயிலில் மதுரைக்கு வந்திங்கன்னா ஸ்டேசனுக்கு எதிர்தாப்பலே இருக்கிற அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால் ரோட்டு முனையிலே இருக்கிற லாலா கடையிலே சுடசுட அல்வா ஒன்னே வாங்கி ஒரு விண்டை எடுத்து வாயிலே போட்டு பாருங்க. அப்புறம் மதுரையே மறக்கவே மாட்டிங்க.