Tuesday, March 27, 2007

weirder habits .....

என்கிட்டே இருக்கிற விசித்திர குணத்தை சொல்லணுமின்னு நம்ம பாசக்கர பயப்புள்ள ஜி கூப்பிட்டுருக்காரு, அவரு கூப்பிட்ட அஞ்சு பேருகளிலே வெட்டி, CVR,இம்சையரசி, இணைய பாடகி மருதம்ன்னு எல்லாரும் பதிவு போட்டுட்டாங்க. என்னை இன்னும் அவரு கூப்பிட்டாரு, அப்புறம் இவரும் கூப்பிட்டாருன்னு பொய் சொல்லமுடியலைங்க, ஏன்னா நம்ம ஜியை தவிர வேற யாரும் என்னை கூப்பிடலை, என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....?? :)




வாசிப்பு:- புத்தக வாசிப்பு இல்லைன்னா நானே இல்லேன்னு சொல்லணும், எந்நேரமும் ஏதாவது ஒன்னை வாசிச்சுட்டு இருப்பேன், எங்க என்ன கிடைச்சாலும் அதிலே என்னமாவது எழுதிருக்கான்னு வாசிப்பேன், ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.

சின்னவயசிலே எனக்கும் என்னோட அக்காவுக்கும் வெள்ளிக்கிழமை காலையிலே சிறுவர்மலர் படிக்கிறதுக்கு பெரிய சண்டையே வரும், அதுவும் எனக்கும் அந்த புத்தகம் வந்ததும் மொத ஆளா நாந்தான் படிக்கனுமின்னு ஒரு பைத்தியம் உண்டு, இன்னும் இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும், அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு, ஆனா எங்கப்பா நான் படிக்கிறோப்ப நடுப்பக்கத்தை கொடுன்னு கேட்டு நச்சரிப்பார், நான் எதையும் கொடுக்கமாட்டேன், இதுனாலே பெரிய சண்டை வந்து எங்கப்பா நடுப்பக்கத்தை பிடுங்குவாரு, நான் அவரோட கோபத்தை கூட்டுறதுக்கு நீயூஸ் பேப்பர் மொத்தயும் ஸ்டாப்ளர் பின்'னடிச்சுட்டு படிப்பேன்.

படிக்கிற புத்தகங்களிலே கதை,கட்டுரை,பிக்சன்,லொட்டு லொஸ்குன்னு எதையும் பிரிச்செல்லாம் வாங்கி படிக்கிறதே கிடையாது, குறிப்பிடத்தக்க முறையிலே என்னை கவர்ந்த எல்லா புத்தகங்களை கணக்குவழக்கிலாமே திரும்ப திரும்ப படிப்பேன், சிலசமயம் கல்கி அவரோட செல்வனை பத்தி சொல்லுறதையும் ஷிட்னி ஷெல்டன் தன்னோட கதாநாயகியோட கதையை ஆரம்பிக்கிறதையும் படிப்பேன்,படிப்பேன், படிச்சிட்டே இருக்கேன்.

ஞாபக சக்தி:- இது என்க்கிட்டெ இருக்கிற பெரிய பிரச்சினை, முக்கியமான கடவுசொல் எல்லாம் மறந்து தொலைஞ்சிரும் ஆனா நான் யாருக்கிட்டே வாங்கினதோ இல்லை நான் யாருக்கோ கொடுத்த வசவுசொல் மட்டும் அப்பிடியே ஞாபகம் இருக்கும். நான் திட்டு வாங்கிருந்தேனா அதை ஞாபகம் வைச்சிட்டு அவங்கிட்டே பேசவே மாட்டேன், அவங்களே வந்து தான் செஞ்சது தப்புன்னு வந்து கேட்டாலும் அந்த மன்னிப்பை ஏத்துக்காத மனோபாவமெல்லாம் இருந்துச்சு, ஆனா இப்போ எல்லாம் கொஞ்ச கொஞ்சமா என்னையே நானே மாத்திட்டு வாறேன், ஆனா புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.

தனிமை:- சிலசமயங்களிலே ஆள் ஆரவமற்ற காட்டிலே நம்ம மட்டும் தனியா இருந்தா எப்பிடியிருக்குமின்னு நினைச்சு பார்த்துக்குவேன், அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு. இன்னமும் வீட்டிலே வாரக்கடைசியிலே தனியா உட்கார்த்துருப்பேன், நண்பர்கள் எல்லாம் வெளியே போலாமின்னு போனாலும் சரி, நான் எங்கேயும் போகமே அப்பிடியே தனியா வீட்டுக்குள்ளே இருப்பேன், நானும் என்னை சுற்றியிருக்கிற அந்த வெறுமையும் தான் பிடிக்கும்.

அறிவுரை:- இது எனக்கிட்டே இருக்கிற கெட்டகுணம்.எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் அறிவுரையை அள்ளி தெளிப்பேன், ஒரு தடவை எங்க கம்பெனி VP கூட மீட்டிங், அவருக்கும் அங்கே வழக்கம்போலே அறிவுரையை அள்ளிக்கொட்டொ கொட்டுன்னு கொட்டி என்னையே பார்த்தாலே இப்போ ஓடிப்போயிருவாரு.ஊர்ப்பக்கம் போனா யாராவது படிக்கிற பசங்க வந்து படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வேலையை பத்தி பேசிட்டா போதும், ஆரம்பிச்சிரும் அறிவுரை அய்யாசாமி பெர்சனாலிட்டி.... இப்போதைக்கு ஜாவா தான் பீக், போனத்தடவை இருந்தமாதிரி VB'க்கு இப்போ மவுசு இல்லேன்னு அள்ளித் தெளியோ தெளிச்சிருவேன்.

ஆர்வக்கோளாறு:- சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், ஆனா எதையாவது கத்துகணுமின்னு அதை போட்டு நோண்டுறது, வீட்டிலே அந்தமாதிரிதான் எல்லா எலக்ட்ரிக்கல் திங்க்'ஸிலே ரிப்பேர் பார்க்கிறேன்னு ஒப்பேத்திருவேன். அந்த வகையிலே எல்லாரும் எழுதுறமாதிரி நாமெல்லும் பதிவு எழுதிப்பிடாலமின்னு தைரியமா பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சது. ஆனா இன்னவரைக்கும் உருப்படியா ஒன்னுமே எழுதினதே கிடையாது. எல்லாமே ஆர்வக்கோளாறிலே ஓப்பேத்தின கணக்குதான்.

இந்த மாதிரியெல்லாம் மொக்கை போடாமே நல்லா எழுதமின்னு கூப்பிட போற அஞ்சு பேர்:-

1) தல கைப்புள்ள,
2) விவசாயி இளா,
3) மதுரை தங்கம் தீக்ஷ்ண்யா,
4) பாசமலர் அவந்திகா,
5) பாசமலர் தூயா,

தலைப்புக்கு காரணமறிய இங்கே சுட்டுங்கள்.;)

[பிற்சேர்க்கை:- இந்த மாதிரி மடத்தனமா தலைப்பு வைச்சதுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்... :( ]