Saturday, December 22, 2007

செப்புத் தாழ்ப்பாள்

கால்தடங்களை அழித்து செல்லும் கடல் அலையென,தன் மனதில் பதிந்த தடங்களை அழித்து செல்லதொரு வல்ல பெரும் ஆழி பேரலைய எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்துவிட்டொழிய வேண்டுமென மனதோடு அந்த புளியமரத்தை வெறித்து பார்த்து கொண்டுருந்தான் வேலு. பெண்ணொருத்தி ஆணின் மீது செலுத்தும் அன்பு எப்பிடியிருக்குமென முழுவதையும் உணர்த்தவனாய், பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.

"ஏண்டியவளே கனகுமணி? இங்கன பாரு அஞ்சு ரூவா'வே கிழே போட்டுட்டு போயிட்டு இருக்கே?"

"அடியாத்தி! என்னோட செவத்த மச்சானே! ஒன்னோட கரிசனம் எனக்கு ஒன்னும் வேணாம்ய்யா! நீ என்னத்துக்கு காசை கிழே போட்டு வைச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு ஒன்னும் தேவையில்ல அந்த காசு."

"சிறுக்கி, என்னத்துக்கு போட்டு வைச்சிருக்கோம் நாங்க! நீ முன்ன போறியே? காசு இங்கன கிடக்கே, அப்போ அது ஒன்னோடதுதான் நினைச்சி கூப்பிட்டேன்."

"பொய் கோழி மாமா, எனக்கு எதுக்குன்னு நல்லாவே தெரியும், நான் பாவாடை சட்டையிலே வந்திருக்கேன், காசு எடுக்க நான் குனிய நீ என்னத்த பாக்க அலையுறேன்னு நல்லாவே தெரியும், செவனேன்னு கெட'மாமேய்."

"ஹிம் நீ வெசயம் தெரிஞ்ச வெச காரிடி! பட்டப்படிப்பு படிக்க போறேன்னு தெனக்கும் சுடிதார் மாட்டிகிட்டு மருத போறே? நானும் அதை படிச்சு கிழிச்சு ஒன்னத்துக்கும் வக்கிலாமே பொட்டிக்கடை வைச்சிட்டு இருக்கேன். நீ படிச்சு என்னத்த கிழிக்க போறே? கழுதவயசு ஆகிப்போச்சிலே,இங்கன இருக்கிறப்பயாவது தாவணி கட்டவேண்டியது தானே?"

" ஒங்கடைக்கு பட்டதாரி கடன் வாங்கினமாதிரி ஒன்னோட கடைக்கு எதிர்க்க நானும் போட்டிகடை ஆரம்பிப்பேன். நீ என்ன எனக்கு தாலி கட்டப்போறவனா? ஒனக்கு பிடிச்சமாதிரி ஒடை உடுத்திட்டு நான் வர்றதுக்கு?"

"என்னய தவிர வேறயாருடி ஒன்னை கட்டப்போறது?"

"ஆத்தி ஒங்கப்பன் வெசப்பல்லுகாரனை மிஞ்சி நீ என்னத்தயாவது செஞ்சுட போறியா என்ன? அந்த பெருசு வெவசாயம் பண்ணுறேன்னு நிலத்தை உழுதது போக அடுத்தவங்ககிட்டே பேசுறேன்னு உசுரை வாங்கிட்டு திரியுது!"

"அப்போ எங்கப்பனை போட்டு தள்ளிறலாமா? சொல்லு எம்மாமன் மவளுக்காக அதைக்கூட செஞ்சுப்பிடலாம்"

"ஆத்தி எனக்கெதுக்கு கொலைகாரபுருஷன்! வேணுமின்னா அது நாக்கை மட்டும் துண்டிச்சிரு அது போதும்"

"ஏண்டி, ஒன்னை கட்டிக்க எங்கப்பனை நான் கொல்லனும்,இல்லன்னா அது நாக்கை வெட்டனுமா? அப்பிடியொன்னும் எனக்கு நீ தேவையில்ல போடி, எனக்கு அம்புட்டு பெரியமதிப்பு பிடிச்ச கெரக்கி இல்ல நீயி"

"அய்யோ, வேணாமின்னுதான் நான் எந்த பக்கம் போனாலும் பின்னாடியே வர்றியாக்கும், ஒங்கப்பன் எங்க வீட்டோட பேச்சை நிப்பாட்டி இருவது வருசமாகியும் நீ மட்டும் எங்க வீட்டுக்கு ஈ'ன்னு பல்லுளிச்சுட்டு போறதுக்கு என்னத்தய்யா காரணம்?"

"ஆமா... ஊருக்குள்ளே பொட்டைப்புள்ளய கலியாணம் பண்ணிக்க ஆளு இல்லாட்டியும் நான் அதை செஞ்சு தியாகி வாழறதுக்கு தயாரா இருக்கேன்னு ஒங்கப்பன்'கிட்டே சூசகமா சொல்லுறதுதான்"

"ஆமாம் ஒன்னோட தியாகத்தை நினைச்சி நம்ம திருமங்கலம் ஊரு மத்தியிலே சிலை வைக்கலாமின்னு ஊருக்காரங்க எல்லாரும் கூடி பேசிட்டு கெடந்தாங்க..."

"ஒன்னை மாதிரி தொணத்து பிடிச்சவளை கட்டுனா எனக்கு தியாகி பட்டந்தாண்டி கிடைக்கும் அப்புறம் செலையும் வைக்கதான் செய்யுவாங்க. சீக்கிரமே அந்த பட்டம் எப்போ கிடைக்குமின்னுதான் ஒன்னோட மாமன் காத்து கெடக்கான்"

"அப்பிடியே காத்து கெட"ன்னு சொல்லிவிட்டு விடுவிடுவென வாய்க்கா ஓரமாக ஓடிச்சென்று மறைந்தாள்.

கனகமணியின் தாய்மாமன் மகன் தான் முத்துவேல், இவள் பிறந்த அன்றே பிரசவத்தில் இவளது அம்மா இறந்து போனதும், எந்தங்கச்சிய நீ சரியா கவனிச்சுக்கலை, அதுதான் செத்து போயிட்டான்னும், என்னோட பொண்டாட்டிய பிரசவத்துக்கு நல்ல வைத்தியம் பார்க்கலை'ன்னு மச்சினன் மச்சினனுக்குள் சண்டை வந்து அன்றிலிருந்து பேசிக்கொள்வது கிடையாது.

"என்னடி அதிசயமா இன்னிக்கு தாவாணிதுணிய உடுத்திக்கிட்டு திரியுறே?"ன்னு கேட்ட அப்புத்தா'வை பார்த்து வெக்கசிரிப்பை உதிர்த்தாள் கனகு.

"அப்பத்தா, நம்ம தோட்டத்திலே கொஞ்சம் மல்லிய பறிச்சு நாரு கட்டி கொடு, நான் தலைக்கு வைச்சிக்க போறேன்."

"முத்து மாமா, ஒன்னோட கடையிலே தங்கசங்கிலி வியாபாரம் பார்க்கிறியாமே? எனக்கு அரைகிலோ'லே கயித்து சங்கிலி செஞ்சு கொடேன்."

"ஏண்டி வாயாடி, நக்கலா? பொட்டிக்கடையிலே தங்கம் வேணுமா ஒனக்கு? என்னிக்கும் இல்லாத திருநாளா தாவணி கட்டிக்கிட்டு வந்துருக்கே? அதை என்கிட்டே காட்டதானே வந்துருக்கே! புதிய வார்ப்புக்கள் வர்ற ரத்தி மாதிரியே இருக்கே? அவளே மாதிரியே அந்த கம்பத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு லேசா மொகத்தை மட்டும் காட்டிகிட்டு நில்லு, நான் சொன்னது சரியா இருக்கும்.... "

"ஆத்தி, என்னை பார்த்தா வேஷக்காரி மாதிரியா இருக்கு? எவ்வளோ ஒருத்தி நடிக்கிறதுக்காக செஞ்சத என்னைய வைச்சி ஒப்பிட்டு பார்க்கிறியா? ஒங்கிட்டே பேசவே மாட்டேன்"

"ஏண்டி கோச்சிக்கிறே? சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன், இது ஒனக்கு நல்லாயிருக்கு, இனிமே தெனக்கும் இதேயே போட்டுக்கிட்டு படிக்க போ! ஹிம் ஒன்னோட வண்டி வந்துருச்சு, ஓடி போயி ஏறிக்கோ!"

கல்லூரி பேருந்திலும் இவளை அதிசயமாக பார்த்த தோழிகளிடம் வெக்க சிரிப்பை மட்டும் உதிர்த்து மெளனமாகவே இருந்தாள்.முத்து மாமனுக்கு பிடித்த இந்த உடையை தான் தினமும் உடுத்தவேண்டுமென்று தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார். எப்போழுதும் நேராபார்த்தாலும் ஒரு முறைப்பு பார்வையோடு பார்த்து செல்லும் மாமா இன்று தன்னிடம் பேசவேண்டும் என நோக்கில் வருவதாய் தோன்றியதும் கனகமணியே பேச்சை ஆரம்பித்தாள். பெருசு கொஞ்சம் எடக்கு பிடிச்சதுதான் அதுனாலே கொஞ்சம் எச்சரிக்கையாகவும் பேசவேண்டுமென்னு மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

"மாமா, நல்லாயிருக்கியா?"

"இருக்கேன், இருக்கேன்.... ஏனாத்தா இப்போல்லாம் தாவணியும்,கை நிறைய வளையலும்,தலையிலே பூவும் வைச்சிட்டு சுத்திருயே? என்னோட பையன் கடையிலே தெனமும் போறதா ஊருசனம் சொல்லி கேட்டேன். இப்பிடியெல்லாம் ஆளை அடிக்கிறமாதிரி உடை உடுத்திக்கிட்டு எம்மவனே மயக்கிறாலமின்னு திரியுறீயா?"

"என்ன மாமா ஒரேடியா பேசிட்டு போறே? நான் இது போடறது பிரச்சினையா? இல்ல ஒன்னோட மவன்கூட பேசுறது பிரச்சினையா?"

"என்னது நான் அதிகமா பேசுறேனா? நீதான் பொட்டகழுத படிக்கப்போறேன்னு சொல்லி தெனமும் ரெண்டு பயலுக கூட திரும்பி வர்றே? இதேமாதிரி என்னோட மவனையும் வளைச்சு போட்டுறாலாமின்னு நினைச்சிக்காதே, இந்த தேவிடியாதனமெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்கோ!"

இந்த அமிலம் கக்கும் வார்த்தைகளை கேட்டு என்ன செய்வது என்று புரியாத கனகு விருவிருவென அங்கயிருந்து ஓடிவிட்டாள். வார்த்தைகளின் அவமானம் பொறுக்காதவள் இந்த புளியமரத்தில் தான் கயிறு மாட்டிக்கொண்டாள். ஐயோ ஆத்தா அம்மா'ன்னு ஊரே ஒப்பாரி வைத்து கொண்டு ஓடிய பொழுது என்ன ஏதோ என்று சென்று பார்த்த வேலுவின் விரக்தியின் உச்சத்தில் மனதளவில் செத்து போனான்.

பலவகையான சோகங்களும் மனதை வேதனைப்படுத்தி கொண்டுருக்க உச்சி வெயிலின் கோரத்திலும் அந்த புளியமரத்தினை உத்து கவனித்து கொண்டுருந்தான். தான் நின்று கொண்டிருந்த பரந்துவிரிந்த மலர் பரப்பின் வெளிவட்டம் உதிர்ந்து, சுருங்கி, பாதம் நொறுங்கி விழுந்த அந்த கணத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டுந்தான். தேக்குமரத்தில் பதிக்கப்பட்ட் செப்புத்தாழ்ப்பாள் கழண்டு விழுந்து ஏற்படுத்திய பள்ளமான வடுவாக கனகுவின் எண்ணம் அவன் இதயத்தில் வலித்து கொண்டுருந்தது.

கனகு'வை கொன்ற தன் அப்பனை என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இந்த ஊரை விட்டு போனவன் ஒரு முறை கூட இந்த பக்கம் எட்டிப்பார்க்க வில்லை. பாவம் செய்த தன் தந்தைக்கு தன்னால் கொடுக்கமுடிந்த தண்டனையாக தன்னை அவன் கண்முன்னாலும் காட்டி கொண்டது இல்லை.தன்னுடைய அக்காவிடம் தொலைபேசியோ இல்ல கடிதப்போக்குவரத்தோ இருக்கிறதுனாலே இவன் உயிரோடு இருப்பதாக அவன் அக்காவும் அந்த ஊரும் நம்பியது. இப்போழுதுகூட அக்கா தனக்கு ஒடம்பு சரியில்லை, என்னாயாவது கொஞ்சம் பார்த்துட்டு போடா'ன்னு கெஞ்சி கேட்டதுனால்தான் ஊருக்கு வந்திருந்தான், ஆனால் அக்காவோ தன்னை ஏமாற்றியதும் அப்பன் ஊசுரு ரெண்டு நாளாக இழுந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு நாட்கள் முழுவதிலும் புளியமரத்தை காணவே நேரத்தை செலவழித்து கொண்டுருந்தான். நினைவலைகளில் பலவகையாக அவனை அலைகழித்து கொண்டுந்த தருணத்தில் சிறுவன் ஒருவன் ஓடிவந்து மாமா மாமா, ஒங்கப்பன் செத்து போயிருச்சு, ஒன்னயா சீக்கிரம் அம்மா வரச்சொன்னுச்சு'ன்னு சொல்லி ஓடிவிட்டான். வெயிலின் கொடுமையில் தலையிலிருந்து பாதம் வரை வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு கண்களுக்கு கீழே மட்டும் வறண்ட பாலைவனமாய் இருக்க மெதுவாக வந்து வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான் வேலு.

"வேலு வந்துட்டான்ப்பா, இனி ஆகுற காரியத்தை பாருங்க, கடைசி ரெண்டு மாசமா அந்தா இந்தா'ன்னு இழுத்துக்கிட்டு இருந்த உசுரு இன்னிக்குதாய்யா போயி சேர்த்துருக்கு, ரொம்ப நேரத்துக்கெல்லாம் இதை வைச்சிருக்க முடியாது. சீக்கிரம் பாடைய கட்டுங்க"ன்னு அடுத்த வீட்டு பெரியவர் சத்தம் போட்டு கொண்டுருந்தார்.

உள்ளே அக்கா மெல்லமாய் விசும்பி கொண்டுருந்தாள். நாலு மாரடிப்பவர்கள் குய்யோ முய்யோன்னு சத்தம் அலறிக்கொண்டுருந்தனர். சேதி கேட்டு கொஞ்சம் கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்கள் யாரும் இவன் கையை பிடித்து ஆறுதல் சொல்லவந்ததாக தெரியவில்லை. எப்பவோ விழவேண்டிய பொணம் இன்னைக்கு விழுந்துருக்கு, அத பார்க்க வந்துருக்கோம்'ன்னு திரிந்து கொண்டுருந்தார்கள்.

"ஏம்பா, இவனுக எரிக்கிற சாதிசனமாச்சே, அப்பன் மேலே இருக்கிற கோவத்திலே அவனுக்கு கொள்ளி வைப்பானா இந்த வேலு பையா"ன்னு மெதுவா கேட்டார் தலையாரி.

"ஏய்யா, இப்பிடி சொல்லுற பெத்த பிள்ள கொள்ளி வைக்காமே வேற யாரு வைக்கிறது?" என்ன வேலு சொல்லுறே? நீ கொள்ளி வைப்பே'ல்லே?ன்னு கேட்ட பெரியவர் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை வேலு.

"அப்பே, பெரும் தண்டனையா அவனுக்கு அந்த சாமியே கொடுத்துருச்சுப்பா, நீயும் மூணு வருசமா ஊருக்குள்ளே வர்றாமே அவனை பார்க்கமே இருந்துன்னு அவன் உசுரை பாதியா கொன்னுட்டே, இன்னமும் கொள்ளி வைக்காமே'ல்லாம் செத்த ஒங்கப்பனை கொடுமைப்படுத்தியிறாதே சாமி, வைக்கிறேன்னு ஒத்த வார்த்தை சொல்லிரு ராசா'ன்னு கேட்ட பெரியவர்க்கு சரி என்பது போலே தலையாட்டினான் வேலு.அடுத்த அரைமணி நேரத்திலே பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு சிதை மூட்ட எல்லா வேலையும் நடக்க ஆரம்பித்தது. வேலுவின் மீசை செரைக்கப்பட்டு பானை சுத்தி ஒடைக்கப்பட்டு கொள்ளி கட்டைய வேலுவின் கையில் கொடுத்தான் வெட்டியான்.இவ்வளவு நேரமும் கண்கள் என்னும் இரண்டையும் இரும்புதிரை கொண்டு முடியிருந்தவன், மெல்லமாய் அதில் நீரை சுரந்து கண்கள் பனித்து தலைபகுதி எரு மேல் வைக்கப்பட்ட சூடத்தில் தீ முட்டினான்.

நேற்று அப்பன் அரைகுறை உசுருலும் தன்னை கூப்பிட்டு காதருகே ஒனக்கு நான் பண்ணின பாவத்துக்கு என்னை மன்னிக்கவே மாட்டேன்னு நல்லாவே தெரியும். நீ கொள்ளி வைக்காமே எங்கட்டை வேகாது, ஆனா அதை நீ செய்யமாட்டே! ஒங்காத்தா பத்தினினா எனக்கு கொள்ளி வைடா என சொன்ன அந்த விஷக்காரனின் வார்த்தை சாமர்த்தியத்தை நினைத்து வெறுத்து சுடுகாட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தான் வேலு.



(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக மற்றும் கொத்ஸ், CVR ஆகியோர் வழியில் ஆங்கில கலப்பில்லாமல் எழுதிய முயற்சி....)